Published : 29 Aug 2018 10:22 AM
Last Updated : 29 Aug 2018 10:22 AM

அண்ணா, கருணாநிதி பாதையில் ஸ்டாலின் திமுகவை சீரும் சிறப்புமாக வழிநடத்த வேண்டும்: விஜயகாந்த் வாழ்த்து

அண்ணா மற்றும் கருணாநிதி பாதையில் ஸ்டாலினும் பயணித்து திமுகவை சீரும் சிறப்புமாக வழிநடத்த வேண்டும் என, தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. கட்சியின் பொதுச்செயலாளர் க. அன்பழகன் இதனை அறிவித்தார். தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தேசிய தலைவர்களும், தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட துரைமுருகனுக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்தும் ஸ்டாலினுக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக விஜயகாந்த் புதன்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “அண்ணா மற்றும் கருணாநிதி பாதையில் ஸ்டாலினும் பயணித்து திமுகவை சீரும் சிறப்புமாக அந்த தலைவர்கள் வழியில் வழிநடத்த வேண்டும் என்று வாழ்த்துகிறேன். திமுக பொருளாளராக துரைமுருகனும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தேமுதிக சார்பாக மகிழ்ச்சியுடன் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் இயக்கத்திற்கு பெருமையையும் புகழையும் சேர்த்திட எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x