Published : 14 Aug 2014 02:24 PM
Last Updated : 14 Aug 2014 02:24 PM

ஆழ்துளை கிணறு: புதிய சட்டத்தை நீக்க தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

ஆழ்துளை கிணறு தோண்டுவதற்கு அனுமதி பெறுவதை கட்டாயமாக்குவதால் விவசாயிகள் பாதிப்படைவர் என்றும், அந்தப் புதிய சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தைத் திருத்துவதற்கான முன்வரைவு சட்டப்பேரவையில் தாக்கல்செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதன்படி வேளாண்மை உள்ளிட்ட பயன்பாடுகளுக்காக ஆழ்துளை குழாய் கிணறு தோண்ட உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து அனுமதி வாங்குவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.

அனுமதி பெறாமல் ஆழ் துளை கிணறுகள் அமைப்போருக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆழ் துளை கிணறுகளை அமைப்பவர்கள் அதற்காக தோண்டப்படும் குழியை பாதுகாப்பாக பராமரிக்காததால், அக்குழிகளில் குழந்தைகள் விழுந்து உயிரிழப்பதாகவும், இத்தகைய விபத்துக்களைத் தடுக்கவே இச்சட்டம் கொண்டு வரப்படுவதாகவும் தமிழக அரசின் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் 4 குழந்தைகள் ஆழ்துளை கிணறுகளுக்காக தோண்டப்பட்ட குழிகளில் விழுந்து உயிரிழந்துள்ள நிலையில், இனியும் இவ்வாறு நடக்கக்கூடாது என்ற நல்ல எண்ணத்துடன், இத்தகைய சட்டங்களைக் கொண்டு வருவதை குறை சொல்ல முடியாது.

அதேநேரத்தில் ஆழ்துளை குழாய் கிணறு விபத்துக்களைத் தடுக்கும் விஷயத்தில் தமிழக அரசின் நோக்கம் நல்லதாக இருந்தாலும், இதற்கு தீர்வு காண்பதற்காக அரசு கடைபிடித்துள்ள அணுகுமுறை சரியானது அல்ல. 10 முதல் 24 அங்குலம் வரை விட்டம் உள்ள ஆழ்துளைக் குழாய் கிணறுகள்தான் ஆபத்தானவை. இவற்றில் தான் விபத்துக்கள் ஏற்படுகின்றன என்பதால் இவற்றை முறைப்படுத்துவது சரியானதுதான்.

ஆனால், ஒட்டுமொத்தமாக அனைத்து வகையான ஆழ்துளை கிணறுகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதால் 3 முதல் 6 அங்குலம் விட்டத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க விரும்பும் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படும் என்பதை அரசு உணர வேண்டும்.

சிறிய ஆழ்துளை கிணறுகளாக இருந்தாலும் அதற்கான அனுமதி பெற ரூ.5000 கட்டணம் செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. கிராமப்புறங்களில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு இது மிகப்பெரிய தொகையாகும். ஊராட்சிகள் மிகவும் சிறிய அமைப்புகளாக இருக்கும் நிலையில், ஆழ்துளை கிணறுகளுக்காக அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும் போது, அதை ஆய்வு செய்யும் பொறுப்பில் இருப்பவர்கள் தனிப்பட்ட மற்றும் அரசியல் விருப்பு வெறுப்புகளை மனதில் கொண்டு, அனுமதி தர மறுக்கும் ஆபத்து உள்ளது.

தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தால் விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்திற்கான பிழைப்பை விடுத்து அனுமதிக்காக அலையும் நிலை ஏற்படுவதும், ஆழ்துளைக் குழாய் கிணறுகளுக்கு அனுமதி தருவது என்ற பெயரில் ஊழல் பெருகுவதும் தான் நடக்குமே தவிர, ஆழ்துளை குழாய் கிணறுகளை ஒழுங்குபடுத்த இயலாது.

எனவே, சிறு கிணறுகள் உட்பட அனைத்து வகையான ஆழ்துளை குழாய் கிணறுகளை அமைப்பதற்கு உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து அனுமதி பெற வேண்டும் என்ற புதிய சட்டத்தை அரசு திரும்பப் பெற வேண்டும். வேண்டுமானால், குழந்தைகளின் உயிர் குடிக்கும் அதிக விட்டம் கொண்ட ஆழ்துளைக் கிணறுகளை முறைப்படுத்த தமிழக அரசு தனியாக சட்டம் கொண்டுவரலாம்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x