Published : 30 Jul 2018 09:46 PM
Last Updated : 30 Jul 2018 09:46 PM
திமுக தலைவர் கருணாநிதியின் நேற்று இருந்தது போல் சீராக உள்ளது. மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில்இருந்து வருகிறார் என்று திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு சிறுநீர் பாதையில் தொற்று இருந்ததால், கோபாலபுரத்தில் உள்ள அவரின் இல்லத்தில் காவேரி மருத்துவமனையின் மருத்துவர்குழு சிகிச்சை அளித்துவந்தனர். இந்நிலையில், கடந்த 27-ம் தேதி கருணாநிதிக்கு ரத்தஅழுத்தம் குறைந்ததையடுத்து, அவர் உடனடியாக நள்ளிரவு 12.30 மணிக்கு காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிறப்பு சிகிச்சை மருத்துவர்கள் குழு அளித்த சிகிச்சையால், கருணாநிதி இயல்புநிலைக்கு திரும்பினார். இந்நிலையில், நேற்று மாலை அவரது உடல்நிலை குறித்து தீவிர வதந்தி எழுந்தது. இதனால் தொண்டர்கள் பதற்றமடைந்தனர். இதையடுத்து அவரது உடல் நிலைக்குறித்து அனைவரும் கவலையுடன் விசாரித்தனர்.
இந்நிலையில் காவேரி மருத்துவமனை அவரது உடல் நிலை சீராக உள்ளதாக தெரிவித்தது. திமுக கொள்கை பரப்புச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசாவும், திமுக தலைவர் உடல்நிலையில் தற்காலிகமாக பின்னடைவு ஏற்பட்டது. ஆனால், மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்குப்பின் இயல்பு நிலையில் இருக்கிறார் எனத் தெரிவித்தார்.
மேலும், திமுக செயல் தலைவர் ஸ்டாலின், கனிமொழி எம்.பி., முக அழகிரி உள்ளிட்டோரும் கருணாநிதி நலமுடன் இருப்பதாகத் தெரிவித்துச் சென்றனர். தொண்டர்களும் அமைதி காத்து போலீஸாருக்கு ஒத்துழைத்து கலைந்து செல்ல வேண்டுகோள் விடுத்தனர்.
இதையடுத்து, இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், மதிமுக பொது செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் கருணாநிதியை மருத்துவமனையில் சந்தித்தனர்.
இந்நிலையில், திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் நிருபர்களுக்கு இன்று இரவு அளித்த பேட்டியில், திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நேற்று இருந்தநிலவரப்படியே சீராக இருக்கிறது. காவேரி மருத்துவமனை மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் கருணாநிதி இருக்கிறார். கருணாநிதியின் உடல்நிலை சீராக இருக்கிறது எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT