திருப்பூரில் கொல்லப்பட்ட சிறப்பு எஸ்ஐ குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி: முதல்வர் உத்தரவு

திருப்பூரில் கொல்லப்பட்ட சிறப்பு எஸ்ஐ குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி: முதல்வர் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: திருப்பூர் மாவட்டத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கிட உத்தரவிட்டுள்ளார். முன்னதாக ரூ.30 லட்சம் நிவாரண நிதி அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அது ரூ.1 கோடியாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிப்புரிந்துவந்த சண்முகவேல் (வயது 57) மற்றும் ஆயுதப்படைக் காவலர் அழகுராஜா ஆகிய இருவரும் நேற்று (05.08.2025) இரவு 11.00 மணியளவில் ரோந்துப் பணிக்குச் சென்றுள்ளனர்.

அப்போது சிக்கனூத்து அருகில் தனியாரின் தோட்டத்து சாலையில் நடந்த அடிதடி பிரச்சினை குறித்து தகவல் அறித்ததும் விசாரிக்க சம்பவ இடத்திற்குச் சென்றனர். அங்கே, அடிதடி பிரச்சனையில் ஈடுபட்டிருந்த மூவர் சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் ஆயுதப்படை காவலர் ஆகிய இருவரையும் துரத்திச் சென்று அரிவாளால் வெட்டியுள்ளனர்.

இதில், சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்சியும், வேதனையுமடைந்தேன். சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைதுசெய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

சண்முகவேலை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.” என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in