Last Updated : 01 Jul, 2025 08:03 PM

2  

Published : 01 Jul 2025 08:03 PM
Last Updated : 01 Jul 2025 08:03 PM

அஜித்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: “அஜித்குமார் கொலை வழக்கில் காவல் துறையைச் சேர்ந்த 5 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கின் விசாரணை குறித்து, எந்தவிதமான ஐயப்பாடும் எழுப்பப்படக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றிடுமாறு உத்தரவிட்டுள்ளேன். சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை தமிழக அரசு வழங்கும்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ‘சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில், கடந்த ஜூன் 28-ம் தேதி அன்று வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்பவர், திருப்புவனம் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். விசாரணையின் போது காவலர்கள் நடத்திய தாக்குதல்தான் அவரது மரணத்துக்குக் காரணம் என்பதை அறிந்ததும் நான் மிகவும் வேதனையடைந்தேன். இது யாராலும் நியாயப்படுத்தப்பட முடியாத, காரணம் சொல்லித் தப்பிக்க முடியாத செயல்.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் குற்றம்சாட்டப்பட்ட 6 காவலர்கள் உடனடியாகச் சம்பவம் நடந்த அன்றே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இத்தகைய வழக்குகளில் பின்பற்றப்பட வேண்டிய சட்ட நடைமுறைகளின்படி, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. நேற்றைய தினம், 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணை சிபிசிஐடி பிரிவுக்கும் மாற்றப்பட்டது. இன்று சம்பந்தப்பட்ட மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். துணைக் கண்காணிப்பளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இப்படி சட்டபூர்வமான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.

துயர மரணத்தை அடைந்துள்ள அஜித்குமாரின் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு நான் பேசினேன். நடைபெற்ற துயரச் சம்பவத்துக்கு எனது வருத்தத்தை அவர்களிடம் தெரிவித்தேன். நியாயமான, ஒளிவுமறைவற்ற, எவ்வித பாரபட்சமுமற்ற விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும், இந்தச் சம்பவத்துக்குக் காரணமானவர்கள் மீது, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அஜித்குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு நியாயம் கிடைத்திட வழிவகை செய்யப்படும் என்றும் உறுதியளித்துள்ளேன்.

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, இவ்வழக்கில் சிபிசிஐடி தனது விசாரணையைத் தொடரலாம் எனவும் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்தச் சம்பவத்தில் காவல் துறையைச் சேர்ந்த ஐவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கின் விசாரணை குறித்து, எந்தவிதமான ஐயப்பாடும் எழுப்பப்படக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றிடுமாறு நான் உத்தரவிட்டுள்ளேன். சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை தமிழக அரசு வழங்கும்.

காவல் துறையினர் தங்களது விசாரணையின்போது மனித உரிமையைக் காக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதை நான் பலமுறை வலியுறுத்தி இருக்கிறேன். இதுபோன்ற மீறல் சம்பவங்களை நான் எப்போதும் ஏற்றுக்கொள்வது இல்லை. திருப்புவனத்தில் சில காவலர்கள் செய்த செயல், மன்னிக்க முடியாதது. இனி இதுபோன்ற செயல் எக்காலத்திலும் எங்கும் யாராலும் நடந்துவிடக் கூடாது என்பதை எச்சரிக்கையாகவே சொல்ல விரும்புகிறேன்.

தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்திடும் என நம்பி காவல் துறையை நாடி வரும் பொதுமக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றிடும் வகையில் காவல்துறை எப்போதும் செயல்பட வேண்டும்,” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

உயர் நீதிமன்றம் அதிருப்தி: முன்னதாக, காவலாளி அஜித்குமார் கொலை தொடர்பான வழக்கின் விசாரணையின்போது, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியமன், ஏ.டி.மரியகிளாட் ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, “அரசின் நடவடிக்கை போதாது. நாகரிக உலகில் வாழ்கிறோம். இதுபோன்ற செயல்களை அனுமதிக்க முடியாது. வட மாநிலங்களில் கல்வியறிவு குறைவு. அங்கு எதிர்பார்க்கலாம். தமிழ்நாடு அப்படியில்லை. அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறது. இதனால், இதுபோன்ற செயல்களை அனுமதிக்க முடியாது. அனுமதிப்பது ஆபத்தை விளைவிக்கும்.

காவல் நிலையத்தில் வைத்து தாக்கப்படவில்லை. அங்குள்ள சிசிடிவி பதிவுகள் இல்லை. கோயிலில் வைத்துத் தாக்கியுள்ளனர். அங்கு சிசிடிவி பதிவு இல்லை. இந்தப் பதிவுதான் முக்கியம். அது இல்லாததை வைத்து குற்றவாளிகளுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்துவிடுவீர்கள். பணியிடை நீக்கம் ரத்தாகும். ரிட் மனுத் தாக்கல் செய்து பணித் தொடர்ச்சி பெறுவார்கள். பணப்பலன்கள் அனைத்தும் கிடைத்துவிடும். உயிர் போனது போனதுதான்” என்றது கவனிக்கத்தக்கது.

முன்னதாக, அரசுத் தரப்பில், “வழக்கை சிபிஐ-க்கு மாற்றுவதாக இருந்தாலும் எந்த ஆட்சேபனையும் இல்லை. தவறு செய்தோர் தண்டிக்கப்பட வேண்டும். அரசு இந்த விஷயத்தில் நேர்மையாக உள்ளது. யாருக்கும் சாதகமாக இல்லை என்பதை வெளிப்படுத்தவே இதைக் கூறுகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து நீதிபதிகள், “சிபிஐக்கு மாற்றுவது தொடர்பாக எழுத்துபூர்வமாக மனுத் தாக்கல் செய்யுங்கள். அதன் பிறகு பார்த்துக்கொள்ளலாம்” என்றனர்.

அப்போது மனுதாரர் தரப்பில், “சிபிஐக்கு மாற்றினால் விசாரணை தாமதமாகும். ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வழக்கில் விசாரணை இன்னும் முடியவில்லை” எனக் கூறப்பட்டது. பின்னர் நீதிபதிகள், “அதனால்தான் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் சிறப்புப் படை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது” என்றது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x