Published : 03 Jul 2018 03:43 PM
Last Updated : 03 Jul 2018 03:43 PM

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை வானிலை ஆய்வு மையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அந்த ஆய்வுமையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன், “சென்னையில் மாலையில் அல்லது இரவில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேற்கு திசை காற்றில் ஏற்பட்ட திசை மற்றும் வேக மாறுபாட்டின் காரணமாக, கடந்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது.

ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் 17 செமீ மழையும், காஞ்சிபுரத்தில் 10 செமீ மழையும் பதிவாகியுள்ளது. அடுத்து வரும் 24 மணிநேரத்தை பொறுத்தவரையில் வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரையில் மாலை மற்றும் இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

தென்மேற்கு பருவமழையைப் பொறுத்தவரையில் கடந்த ஜூன் மாதம் 1 முதல் ஜூன் 30-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பதிவான மழையின் அளவு 49 மிமீ. இந்த காலகட்டத்தின் இயல்பு அளவு 46 மிமீ. ஆகையால், இது, இயல்பு அளவை விட 6 சதவீதம் அதிகம்” என பாலச்சந்திரன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x