Published : 08 Jun 2025 10:37 AM
Last Updated : 08 Jun 2025 10:37 AM

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் அவதி - அரசு நிர்வாக விளக்கம் என்ன?

கோப்புப் படம்

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு நள்ளிரவில் ஒரே நேரத்தில் மிக அதிக அளவில் பயணிகள் வருவதால், கூடுதல் பேருந்துகள் இயக்குவதில் சிரமம் ஏற்படுவதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து கடந்த 4-ம் தேதி இரவு தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இல்லாததால் 1,000-க்கும் மேற்பட்ட பயணிகள் அவதிப்பட்டனர். அவர்கள், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், சாலையில் இரு புறமும் 3 கி.மீ. வரை வாகனங்கள் அணி வகுத்து நின்றன. போக்குவரத்து துறை மீது பயணிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இந்நிலையில், இது குறித்து அரசு விரைவு போக்கு வரத்துக் கழக மேலாண் இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு தினமும் 1.136 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கடந்த 4-ம் தேதி. வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 200 பேருந்து களும், 5-ம் தேதி 622 பேருந்துகளும், 6-ம் தேதி 798 பேருந்துகளும் இயக்கப்பட்டன, இந்த 3 நாட்களில் முன்பதிவு செய்திருந்த 24,831 பேர் உட்பட 2,76,735 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்யும் போது, பேருந்து நிலையங்களில் தேவையற்ற விவாதங்கள், முந்தியடித்து ஏறு தல், தேவையற்ற சர்ச்சைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். முன்பதிவில்லாமல், நள்ளிரவில் ஒரே நேரத்தில் மிக அதிக அளவில் பயணிகள் பேருந்து நிலையத்துக்கு வருவதால் கூடுதல் பேருந்து இயக்குவதில் சிரமம் ஏற்படுகிறது.

எனவே, தொலைதூர பயணம் மேற்கொள்ளும் பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், தங்களது பயணத்துக்கு www.Instc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வேண்டும். பயணிகள் முன்பதிவு செய்யும் பட்சத்தில் தேவைக்கு ஏற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க வழிவகை செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x