நிதி ஆயோக் கூட்டத்துக்கு இந்தமுறை முதல்வர் சென்றது அரசியல்தான்: ஜி.கே.வாசன்

நிதி ஆயோக் கூட்டத்துக்கு இந்தமுறை முதல்வர் சென்றது அரசியல்தான்: ஜி.கே.வாசன்
Updated on
1 min read

சிவகாசி: நிதி ஆயோக் கூட்டத்தை கடந்த 3 ஆண்டுகளாக புறக்கணித்த தமிழக முதல்வர், இந்த முறை சென்றது அரசியல், தேர்தல், வாக்கு வங்கி கண்ணோட்டம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது, என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்தார்.

சிவகாசியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாவட்டச் செயலாளர் ராஜபாண்டி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட ஜி.கே.வாசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: பாஜக, அதிமுக, தமாக உள்ளிட்ட ஒத்த கருத்துகள் கொண்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி தமிழகத்தில் வெற்றிக் கூட்டணியாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் நல்லாட்சி வழங்குவதற்கு ஒத்த கருத்துடைய அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பமாக உள்ளது. மத்திய அரசு கூடுதல் நிதி கொடுக்க வேண்டும் என கேட்கும் தமிழக முதல்வர் கடந்த 3 ஆண்டுகளாக நிதி அயோக் கூட்டத்தை அலட்சியப்படுத்தி புறக்கணித்தாரா என்பது மிகப்பெரிய கேள்வியாக மக்களிடம் உள்ளது.

இந்த முறை நிதி அயோக் கூட்டத்திற்கு முதல்வர் சென்றது அரசியல், தேர்தல், வாக்கு வங்கி கண்ணோட்டம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. நகைக் கடன் தொடர்பான விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும் என தமாக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்கின்ற வகையில் அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in