Published : 13 Aug 2014 07:17 PM
Last Updated : 13 Aug 2014 07:17 PM

தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க ராஜபக்சே உத்தரவு

இந்திய சுதந்திர தினத்தையொட்டி, இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய, அந்நாட்டு அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, இலங்கை அதிபர் ராஜபக்சேவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "இந்திய சுதந்திர தினத்தையொட்டி, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய, அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்கள் 94 பேரும் உடனடியாக விடுவிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் 62 விசைப்படகுகள் திரும்ப ஒப்படைக்கப்படுமா என்பது குறித்த தகவல் இல்லை.

இதனிடையே, இலங்கை கடற்பைடையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கச்சத்தீவில் மீன்பிடிக்கும் உரிமையை தமிழக மீனவர்களுக்கு உறுதிபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் இன்று ராமேசுவரம் மீனவர்கள் 20-வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதனால், அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, டெல்லியில் மே மாதம் பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை அதிபர் ராஜபக்சே சந்தித்த பிறகு, நல்லெண்ண அடிப்படையில் இலங்கை சிறையில் இருந்த அனைத்து மீனவர்களும் விடுவிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x