Published : 27 Jul 2018 02:42 PM
Last Updated : 27 Jul 2018 02:42 PM

கருணாநிதியின் அசைவுக்காக ஒட்டுமொத்த தமிழகமே ஸ்தம்பித்து நிற்கிறது: டி.ராஜேந்தர் கண்ணீர்

திமுக தலைவர் கருணாநிதியின் அசைவுக்காக ஒட்டுமொத்த தமிழகமே ஸ்தம்பித்து நிற்கிறது என, லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

‘திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலத்தில், வயது காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது. மருத்துவக் குழுவினர் 24 மணி நேரமும் அவரைக் கவனித்து வருகின்றனர் ’ என்று காவேரி மருத்துவமனை தெரிவித்திருக்கிறது.

இதனால், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கோபாலபுரம் இல்லத்துக்கு வருகை தந்து அவருடைய உடல் நலம் குறித்து கேட்டறிந்து செல்கின்றனர். திமுக தொண்டர்களும் தொடர்ந்து அங்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் கோபாலபுரம் இல்லத்திற்அருகை புரிந்து ஸ்டாலினிடம் கருணாநிதி உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் கண்ணீருடன் பேசிய டி.ராஜேந்தர், “50 ஆண்டுகாலம் ஒரு இயக்கத்தை கட்டிக்காத்த பெருமைக்கும் திறமைக்கும் உரியவர் கருணாநிதி. அரசியலில் தனி முத்திரையைப் பதித்து வரலாறு படைத்திருக்கிறார். 1965-ல் திமுகவால் ஈர்க்கப்பட்டவன் நான். கருணாநிதியை தவிர வேறு எவரையும் தலைவராக ஏற்றுக்கொண்டதில்லை. திமுகவை விட்டு வெளியே வந்தாலும், லட்சிய திமுக என்றிருப்பேன்.

திமுக கருணாநிதியால் கட்டிக் காக்கப்பட்ட இயக்கம். அவரின் அசைவுக்காக தமிழகமே ஸ்தம்பித்து நிற்கிறது. அவரை உள்ளே சென்று பார்க்க முடியவில்லை. என் கண்களில் ததும்பி வழிந்த கண்ணீரை ஸ்டாலின் துடைக்க முன்வந்தாரே அந்த உணர்வை எண்ணிப் பார்க்கின்றேன்” என டி.ராஜேந்தர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x