Published : 24 Apr 2025 05:12 AM
Last Updated : 24 Apr 2025 05:12 AM
சென்னை: திமுகவின் 4 ஆண்டுகால ஆட்சியில் வணிகவரி மற்றும் பதிவுத் துறைகளில் மொத்தமாக ரூ.5.88 லட்சம் கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று வணிகவரித் துறை மானியக் கோரிக்கை மீதான கேள்விகளுக்கு அமைச்சர் மூர்த்தி பதிலளித்து பேசியதாவது: மாநில அரசின் வரிவருவாயில் வணிகவரித் துறை மூலமாக 71.6 சதவீதமும், பதிவுத்துறை மூலமாக 15.4 சதவீதமும் பெறப்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் வணிகவரித் துறை மொத்தமாக ஈட்டியுள்ள வரிவருவாய் ரூ.6.87 லட்சம் கோடியாகும். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் மட்டும் இதுவரை ரூ.5.08 லட்சம் கோடி வருவாயை இந்த துறை ஈட்டியுள்ளது.
அதேபோல், பதிவுத் துறையில் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சிக் காலத்தில் ஈட்டப்பட்ட மொத்த வருவாய் ரூ.88,844 கோடியாகும். ஆனால், இந்த 4 ஆண்டுகளில் மட்டும் இதுவரை ரூ.72,004 கோடி வருவாய் பெறப்பட்டுள்ளது. இந்த துறைகளால் வசூலிக்கப்படும் வருவாயின் பங்களிப்பானது புதுமையான பல திட்டங்களை செயல்படுத்தி, மாநிலத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்தவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடவும் ஆதாரமாக உள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்த போது 2020-21-ம் ஆண்டில் இழப்பீட்டுத் தொகை இல்லாமல் ரூ.85,867 கோடியாக வணிகவரித் துறையின் வரிவருவாய் இருந்தது. தற்போது தொடர் முயற்சிகளால் 2024-25-ம் நிதியாண்டில் ரூ.1 லட்சத்து 38,120 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2020-21-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது ரூ.52,252 கோடி கூடுதலாகும். வரி வசூலில் முதன்மையாக இருந்தபோதும் துறையின் நிர்வாக செலவீனம் வருவாயில் அரை சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது.
புதிய கோட்டங்களுக்கு தேவையான பணியாளர்கள், கட்டிடங்கள் உட்பட உட்கட்டமைப்புகள் வழங்கப்படும். ஏற்கெனவே உள்ள கோட்டங்களில் பழைய மற்றும் வாடகை கட்டிடங்களில் செயல்படும் அலுவலகங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டவும், மின்னணு சாதனங்கள் வாங்கவும் இந்த நிதியாண்டில் வணிகவரித் துறைக்கு ரூ.350 கோடி ஒதுக்கப்படும்.
இதுதவிர 2024-25-ம் ஆண்டில் ஜிஎஸ்டி வரி வசூலில் தேசிய வளர்ச்சி விகிதம் 11.40 சதவீதமாக உள்ள நிலையில் தமிழக வளர்ச்சி விகிதம் அதைவிட உயர்வாக 15.22 சதவீதமாக இருக்கிறது. மேலும், இந்தாண்டு சரக்குகள் மற்றும் சேவைகள் வரித் தீர்வு அதிகரித்து நமது மாநிலத்துக்கு ரூ.4,036 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.
இதேபோல் பதிவுத்துறையானது, அரசின் மொத்த வருவாயில் 15.4 சதவீதத்தை அளித்து 2-ம் இடத்தில் உள்ளது. 2020-21-ம் நிதியாண்டில் ரூ. 10,643 கோடியாக இருந்த பதிவுத்துறையின் வருவாய் தற்போது ரூ.21,968 கோடியாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையே 7 புதிய பதிவுத்துறை அலுவலகங்கள் தொடங்கப்பட்டு விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரவுள்ளன. அதனுடன் பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் அந்தந்த சார்பதிவாளர் அலுவலக எல்லைக்குள்ளேயே அலுவலகம் அமையும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், பதிவுத்துறைக்கு தேவையான அடிப்படை உட்கட்டமைப்புகளை வழங்குவதற்கு இந்த நிதியாண்டில் ரூ.100 கோடி ஒதுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT