

மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் தொழுகை நடத்தும் முயற்சியைத் தடுக்க வேண்டும் என்று காவல் துறையில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி புகார் அளித்துள்ளார்.
இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் சோலைக்கண்ணன், மதுரை காவல் ஆணையர் மற்றும் திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளரிடம் கொடுத்த புகார் மனுவின் விவரம்: ‘திருப்பரங்குன்றம் மலையிலுள்ள நெல்லித்தோப்பில் யாரும் தொழுகை நடத்த தடை விதிக்க மதுரை உயர்நீதி மன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து வழக்கும், மலை மீது ஆடு, கோழி போன்ற அசைவ உணவு சமைக்கவும், கொண்டு செல்லவும் தடை விதிக்க கோரிய வழக்கும் உள்ளிட்ட இன்னும் சில வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், ரம்ஜானையொட்டி நெல்லித்தோப்பில் தொழுகை நடத்த இஸ்லாமிய அமைப்புகளும், சிக்கந்தர் தர்கா நிர்வாகமும் மீண்டும் முயற்சிப்பதாக தகவல் கிடைக்கிறது. ஏற்கெனவே திருப்பரங்குன்றம் மலை விவகாரம் பெரிய பிரச்சினையாக இருக்கும் நிலையில் மீண்டும் மத பிரச்சினையை கிளப்பும் வகையில் ரம்ஜானை காரணம் காட்டி இஸ்லாமிய அமைப்புகள் மலை மீது தொழுகை நடத்தும் முயற்சியை காவல் துறையினர் முன்கூட்டியே தடுக்க வேண்டும். இதற்கு திட்டமிடும் எஸ்டிபிஐ, மனிதநேய மக்கள் கட்சி, சிக்கந்தர் தர்கா நிர்வாகத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.