Last Updated : 26 Jul, 2018 02:26 PM

 

Published : 26 Jul 2018 02:26 PM
Last Updated : 26 Jul 2018 02:26 PM

சொத்து வரி உயர்வை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு: விரைவில் விசாரணை

சொத்து வரி உயர்வை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

''தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் உள்ளன. உள்ளாட்சி அமைப்புகளில் குடியிருப்போரிடம் இருந்து சொத்து வரி, குடிநீர் வரி, கழிவுநீர் வரி வரியும், தற்போது குப்பை வரியும் வசூலிக்கப்படுகிறது. குடியிருப்பின் அளவு, அதிலுள்ள வசதிகள் மற்றும் அமைந்துள்ள இடத்தின் தன்மையைப் பொறுத்து சொத்து வரி விதிக்கப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த 2008-ம் ஆண்டில் சொத்து வரி உயர்த்தப்பட்டது. அப்போது மாநகராட்சிகள், நகராட்சிகள், மூன்றாம் நிலை நகராட்சிகள், பேரூராட்சிகளில் அப்போதைக்கு வழங்கப்பட்டிருந்த வசதிகளின் அடிப்படையில் சொத்து வரி நிர்ணயம் செய்யப்பட்டது. பின்னர் கடந்த 10 ஆண்டுகளாக சொத்து வரி மாற்றியமைக்கப்படவில்லை.

இந்நிலையில் குடியிருப்புகளுக்கான வரி 50 சதவீதமும், வாடகை குடியிருப்பு கட்டிடங்கள், குடியிருப்பு அல்லாத கட்டிடங்களுக்கான வரி நூறு சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் அடுத்தாண்டில் இருந்து வரி உயர்வை அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலர் ஜூலை 19-ல் அரசாணை பிறப்பித்துள்ளார். இந்த வரி விதிப்பால் வாடகை வீடுகளில் குடியிருப்போர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படும். எனவே சொத்து வரி உயர்வு தொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும்''.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x