Published : 02 Jul 2018 08:24 AM
Last Updated : 02 Jul 2018 08:24 AM
திமுகவில் மதுரை மாநகர் வடக்கு, தெற்கு ஆகிய 2 மாவட்டங்கள் ‘மதுரை மாநகர்’ என ஒரே மாவட்டமாக இணைக்கப்பட்டுள்ளது. மாவட்ட பொறுப்பாளராக கோ.தளபதி நியமிக்கப் பட்டுள்ளார்.
இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திமுகவில் மாவட்ட எல்லைகளை மாற்றியமைக்க உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் டி.ஆர்.பாலு தலைமையில் மூவர் குழு அமைக்கப்பட்டது. அக்குழு தனது அறிக்கையை செயல் தலைவர் முக.ஸ்டாலினிடம் அளித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட எல்லைகள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, மதுரை மாநகர் வடக்கு, மதுரை மாநகர் தெற்கு ஆகிய 2 மாவட்டங்களும் மதுரை மாநகர் மாவட்டம் என ஒரே மாவட்டமாக செயல்படும். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மதுரை மாநகர் மாவட்டப் பொறுப்பாளராக முன்னாள் எம்எல்ஏ கோ.தளபதி செயல்படுவார்.
பொறுப்புக்குழு உறுப்பினர்களாக வ.வேலுச்சாமி, பெ.குழந்தைவேலு, பி.எஸ்ஸார் கோபி, சி.சின்னம்மாள், பொன்.மு.சேதுராமலிங்கம், ஜெ.ஜவஹர், மா.ஜெயராமன், தமிழரசி, பா.சரவணன் ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர்.
மதுரை மாநகர் மாவட்டம் மதுரை வடக்கு, தெற்கு, மத்தி, மேற்கு ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்டதாக இருக்கும். ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி, வட்ட அமைப்பின் நிர்வாகிகள் புதிய நிர்வாகிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு க.அன்பழகன் தெரி வித்துள்ளார்.
ஒரு சட்டப்பேரவைத் தொகுதி 2 மாவட்டங்களில் இருப்பதால் முடிவு எடுப்பதில் சிக்கல் ஏற்படுவதாக திமுகவில் புகார் எழுந்தது. இதையடுத்து சட்டப்பேரவை தொகுதி அடிப்படையில்s மாவட்டங்களை சீரமைக்க முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் 3 பேர் குழு அமைக்கப்பட்டது.
இக்குழு அறிக்கையின்படி தற்போது மதுரை மாநகர் மாவட்டம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT