‘பெரும் நிறுவனங்களிடம் வரி வசூல் செய்ய மதுரை மாநகராட்சி அஞ்சுவது ஏன்?’ -  கவுன்சிலர்கள் கேள்வியால் அமளி

மதுரை மாநகராட்சிக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய கவுன்சிலர்கள்
மதுரை மாநகராட்சிக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய கவுன்சிலர்கள்
Updated on
3 min read

மதுரை: “பெரும் நிறுவனங்களிடம் கோடிக்கணக்கில் நிலுவையில் உள்ள வரி பாக்கியை வசூல் செய்வதற்கு அதிகாரிகள் அஞ்சுவது ஏன்?" என்று மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக, திமுக கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பியதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

மதுரை மாநகராட்சி கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நடந்தது. ஆணையர் சித்ரா, துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். மண்டலத் தலைவர் வாசுகி, “இந்த மாநகராட்சி நிர்வாகம் பொறுப்பேற்று இதுவரை 36 கவுன்சில் கூட்டம் நடந்துள்ளது. ஒவ்வொரு கூட்டத்திலும் கேட்ட 100 கேள்விகளையே மீண்டும் மீண்டும் கேட்க வேண்டி உள்ளது. அப்பிரச்சினைகள் தீர்ந்தபாடில்லை. கிழக்கு மண்டலத்தில் 11 கண்மாய்கள் உள்ளன. இவைதான், இப்பகுதி வார்டுகளுடைய முக்கிய நீர் ஆதாரம். இந்த கண்மாய்களை பொதுப் பணித்துறைதான் தூர்வார வேண்டும் என்று காத்து கொண்டிருக்க முடியாது” என்றார்.

மேயர் இந்திராணி: “36 கூட்டங்களிலும் உங்களுடைய கோரிக்கை எதையும் மாநகராட்சி நிறைவேற்றவில்லையா?” என்றார். வாசுகி: “நான் அப்படிச் சொல்லவில்லை. தீர்க்கப்படாத பிரச்சினைகளைதான் சொன்னேன்” என்றார்.

மண்டலத் தலைவர் சரவண புவனேஷ்வரி: “அம்ரூத் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தில் ஒரு சொத்து வரிக்கு ஒரு புதிய குடிநீர் இணைப்புதான் வழங்கப்படுகிறது. மதுரையில் ஒரே சொத்து வரியில் 5 முதல் 10 வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளனர். நத்தம் புறக்கும்போக்கு நிலத்தில் அடித்தட்டு மக்கள் வீடு கட்டி வசிக்கிறார்கள். சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்க முடியாது என மாநகராட்சி கூறுகிறது.

ஆனால், அந்த மக்கள் சொத்து வரி கட்ட தயாராக இருக்கிறோம். வரி நிர்ணயிக்க சொல்கிறார்கள். மாநகராட்சி ஆவணங்கள் இல்லாமல் வரி நிர்ணயம் செய்ய மாட்டோம் என்கிறார்கள். இந்த குடிநீர் இணைப்பு பெரிய பிரச்சினையாக மாறி, மாநகராட்சிக்கும், மக்களுக்கும் இடையில் நாங்கள் திண்டாடுகிறோம். மாநகராட்சிதான் அரசு கவனத்துக்கு கொண்டு சென்று சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் சோலைராஜா: “பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தை 15 வார்டுகளில் மட்டுமே முடித்துவிட்டு முதல்வர் திறந்து வைக்க உள்ளதாக கேள்விப்பட்டேன். 100 வார்டுகளிலும் முடித்த பிறகுதான் செயல்படுத்த வேண்டும். மாநகராட்சி சாலைகளில் சென்றால் மக்கள், எலும்பு முறிவு மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறும்நிலைதான் உள்ளது. மாநகராட்சி பட்ஜெட்டில் இந்த முறையாவது மழைநீர் கால்வாய்களை தூர்வார நிதி ஒதுக்க வேண்டும்.

சிறு குறு வியாபாரிகளுக்கான தொழில் வரி அதிகபடியாக உயர்ந்துள்ளது. அவர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அந்த வரியை குறைக்க வேண்டும். மாநகராட்சி வருவாயை பெருக்க, கோடிக்கணக்கில் வரி பாக்கி வைத்துள்ள பெரும் நிறுவனங்களிடம் வசூல் செய்ய மாநகராட்சி தயங்குகிறது. 10,000 வணிக கட்டிங்கள், குடியிருப்பு வரி செலுத்துகிறார்கள். அவர்களை முன்னாள் ஆணையர் தினேஷ்குமார் கண்டுபிடித்து எடுத்த நடவடிக்கை அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

சாதாரண பொதுமக்களிடம் நெருக்கடி கொடுத்து வரி வசூல் செய்யும் மாநகராட்சி, 2 மிகப் பெரிய நகைக் கடைகளிடம் வழக்கை காரணம் காட்டி பல கோடி ரூபாயை வரி வசூல் செய்யாமல் உள்ளது. பெரிய நிறுவனங்களிடமும் வரிவசூல் செய்வதற்கு மேயர் சாட்டையை சுழற்ற வேண்டும்” என்றார்.

துணை மேயர் நாகராஜன்: “மாநகராட்சி வழக்கறிஞர் குழு மிக பலவீனமாக இருக்கிறது. அவர்கள் தொடர் முயற்சி எடுத்து வழக்கு தொடுக்கவோ, வழக்கில் வெற்றி பெறவோ நடவடிக்கை எடுப்பதில்லை. அவர்களை கண்காணிக்கும் அலுவலரும் சரியில்லை. திறமையான வழக்கறிஞர்களை தேர்வு செய்ய வேண்டும். உதாரணத்துக்கு ஹார்விபட்டியில் எனது பெரும் முயற்சிக்கு பிறகு முன்னாள் ஆணையர் கார்த்திகேயன், முன்னாள் ஆட்சியர் அனீஸ் சேகர் ஆகியோருடைய ஒத்துழைப்பு காரணமாக மாநகராட்சிக்கு சொந்தமான 2 ஏக்கர் 15 சென்ட் மீட்கப்பட்டது.

அந்த இடத்தில் எதிர்தரப்பினர் வழக்கு தொடுத்தனர் என்பதற்காக, இதுவரை மாநகராட்சி, வேலியும் போடவில்லை. மாநகராட்சி இடம் என்று போர்டும் வைக்கவில்லை. 5-வது மண்டலம் அலுவலகத்துக்கு அருகே கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 40 சென்ட் இடம் உள்ளது. அந்த இடத்தில் கல் ஊன்றி கூட பாதுகாக்கப்படவில்லை. தனியார் ஆக்கிரமிப்பு அங்கு உள்ளது. நோட்டீஸ், வழக்கு வந்தாலே மாநகராட்சி அஞ்சுகிறது.

வழக்குகளை எதிர்த்து போராட தயங்குகிறது. உத்தரவு வந்தாலே எதை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம். மாநகராட்சி சொந்தமான பல இடங்கள் இன்னும் ஆணையர் பெயரில் ஏற்றப்படாமல் உள்ளது. அதற்கான நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்வதில்லை. ஒன்று இந்த இடங்கள் ஏமாற்றி விற்கப்படுகிறது அல்லது ஆக்கிரமிக்கப்படுகிறது. இப்படியே சென்றால் மாநகராட்சியில் பொது பயன்பாட்டுக்கு இடமே இருக்காது” என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் குமரவேல்: “துணை மேயர் மட்டும், மேயருக்கு, அதிகாரிகளுக்கு தெரியாமல் வார்டுகளில் சென்று ஆய்வு செய்தால் குற்றம் சொல்கிறீர்கள். அப்படியென்றால் உங்களுக்கு ஒரு நியாயம், மற்ற கவுன்சிலர்களுக்கு நியாயமா?” என்றார். அப்படி அவர் கூறியதும், திமுக கவுன்சிலர்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் நீடித்தது.

ஆணையர் தமிழ் நாளிதழ்களை படிப்பது இல்லையா? - காங்கிரஸ் கவுன்சிலர் கார்த்திகேயன் பேசுகையில், “மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து ஆணையர் எட்டிப்பார்க்கிற தொலைவில்தான் சுற்றுச்சூழல் பூங்கா உள்ளது. நான் உள்பட பொதுமக்கள் அன்றாடம் இங்குதான் நடைப்பயிற்சி செல்கிறோம். அந்த பூங்கா பராமரிப்பு இல்லாமல் உள்ளது,” என்றார். அதற்கு ஆணையர் சித்ரா, “பார்க்கிறேன்” என்றார்.

மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் சோலைராஜா, காங்கிரஸ் கவுன்சிலர் ஆகியோர், “அன்றாடம் நாளிதழ்களில் மாநகராட்சி சாலைகள், குடிநீர், பாதாள சாக்கடை போன்ற பல மக்கள் பிரச்சினைகள் பற்றி அதிகம் செய்திகள் வருகிறது. அதற்கு தீர்வும் காணப்பட்ட மாதிரி தெரியவில்லை. ஆணையர், தமிழ் நாளிதழ்கள் படிக்காததால் இப்பிரச்சினைகள் தங்கள் கவனத்துக்கு தெரியவில்லை என நினைக்கிறோம்,” என்றனர்.

ஆணையர் சித்ரா: “நான் தமிழ் நாளிதழ் படிப்பதில்லை என்று யார்? சொன்னது” என்றார். மேயர் இந்திராணி: “ஆணையர் நன்றாக தமிழ் எழுத, படிக்க தெரியும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in