Published : 30 Jul 2018 05:04 PM
Last Updated : 30 Jul 2018 05:04 PM
திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையிலும் பல அதிசயங்களை நிகழ்த்திக் கொண்டிருப்பதாக, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் உடல்நிலையில் தற்காலிகமாக ஞாயிற்றுக்கிழமை மாலை திடீர் பின்னடைவு ஏற்பட்டது. அதன்பின் மருத்துவர்கள் தீவிர சிகிச்சைக்குப்பின் சீராகி வருகிறது. மருத்துவக்குழுக்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றன.
ஆனால், காவேரி மருத்துவமனையின் முன் திமுக தொண்டர்கள் ஏராளமானோர் குழுமினர். இவர்களை கலைந்து செல்லக் கோரி போலீஸார் கூறியும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். இதையடுத்து, திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல்நலம் சீராக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்து மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோரை சந்தித்து கருணாநிதி உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், “கருணாநிதி உடல்நிலை சீராக உள்ளது. நேற்று மாலை இருந்த நிலையுடன் ஒப்பிடுகையில் மருத்துவ சிகிச்சையால் தற்போது மிகுந்த நலம் பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தேறி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. 70-80 ஆண்டுகளாக பல போராட்டங்களை நடத்தி அதிசயங்களை நிகழ்த்தியவர் கருணாநிதி. மருத்துவமனையிலும் தற்போது அதிசயங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். அதிசயிக்கத்தக்க வகையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது. மேலும், அவர் பூரண நலம் பெறவும் இல்லம் திரும்பவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்தார்.
அப்போது, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தமிழகம் வந்து கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிப்பாரா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த திருநாவுக்கரசர், “ராகுல்காந்தி சார்பாக கனிமொழி, ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து நலம் விசாரித்தேன். கருணாநிதியின் உடல்நலம் தேறியிருப்பதாக அனைவரும் தெரிவித்தார்கள். நேற்றிருந்த நிலையை ராகுல்காந்தியிடம் கூறியிருக்கிறேன். ஏற்கெனவே மூத்த தலைவர்கள் முகுல் வாஸ்னிக், குலாம் நபி ஆசாத் வந்திருந்து உடல்நலம் குறித்து விசாரித்துள்ளனர். தற்போதைய நிலை குறித்து ராகுல்காந்தியிடம் தெரிவிக்கப்படும். விரைவில் இதுசம்மந்தமாக முடிவு எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT