

சென்னை: குவைத் நாட்டில் புகையின் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் வட்டம், மங்கலம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த முகமது யாசின் மற்றும் முகமது ஜுனைத் ஆகிய இருவரும் குவைத் நாட்டில் ஓட்டுநர்களாக பணியாற்றி வந்த நிலையில், கடந்த 19.1.2025 அன்று காலையில் மேற்படி இருவரும் தங்கியிருந்த அறையில் கடும் குளிரிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தீ மூட்டியதாகவும், நீண்ட இரவின் காரணமாக தீயை அணைக்காமல் அப்படியே உறங்கியதால் நெருப்புப் அணைந்து ஏற்பட்ட புகையினால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்துள்ளனர்.
மேற்படி இருவரின் உடல்களை கடந்த 22.1.2025 அன்று குவைத் நாட்டிலேயே உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது என்று துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் தலா ஐந்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.