Published : 04 Jul 2018 01:14 PM
Last Updated : 04 Jul 2018 01:14 PM
டெல்லி துணைநிலை ஆளுநருக்கு உள்ள அதிகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை புதுச்சேரி காங்கிரஸ், அதிமுக ஆகிய கட்சிகள் வரவேற்றுள்ளன.
டெல்லியை போன்று புதுச்சேரியிலும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் அரசுக்கும் இடையில் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் டெல்லி துணைநிலை ஆளுநருக்கு உள்ள அதிகாரம் குறித்து இன்று (புதன்கிழமை) உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அரசின் ஆலோசனையுடன் தான் துணைநிலை ஆளுநர் செயல்பட வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தீர்ப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த புதுச்சேரி மாநில சட்டப்பேரவை அரசு கொறடா அனந்தராமன், “துணைநிலை ஆளுநருக்கு தனியான அதிகாரங்கள் இல்லை. அமைச்சரவையின் வழிகாட்டுதலின்படியே துணைநிலை ஆளுநர் செயல்பட வேண்டும். எந்தவொரு கோப்பு அனுப்பப்பட்டாலும் மக்களாட்சி தத்துவத்திற்கும் அமைச்சரவை முடிவுக்கும் மதிப்பளிக்க வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் மக்கள் கருத்துக்கள் மக்கள் எண்ணங்கள் நிலைநாட்டப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் செயல்படுவார் என நம்புகிறேன்” என தெரிவித்தார்.
அதிமுக சட்டப்பேரவை கட்சி தலைவர் அன்பழகன், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் மதிப்பளிக்கும் தீர்ப்பு. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை புதுச்சேரி மாநில அதிமுக வரவேற்கிறது. இந்த தீர்ப்பின் மூலம் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தடை நீங்கியுள்ளது. இந்த தீர்ப்பை மதித்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி செயல்பட வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT