

“போலீஸாருக்கு நீதிமன்றத்தின் உத்தரவுகளை அமல்படுத்த நேரமில்லாத காரணத்தால் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுகிறேன்” முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட மோசடி வழக்கின் தொடர் விசாரணையில் தான் ஐகோர்ட் நீதிபதி பி.வேல்முருகன் இப்படி அதிரடி காட்டி இருக்கிறார்.
அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.30 லட்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக அதிமுக நிர்வாகியான ரவீந்திரன் என்பவர் 2021 நவம்பர் 15-ல் விருதுநகர் குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் அதிமுக-வைச் சேர்ந்த விஜய் நல்லதம்பி, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதேநாளில், சத்துணவு, கூட்டுறவு, ஆவின், ஊராட்சி செயலர் உள்ளிட்ட வேலைகளுக்கு பலரிடம் பணம் பெற்று, ராஜேந்திர பாலாஜியிடம் ரூ.3 கோடி கொடுத்ததாக விஜய் நல்லதம்பி கொடுத்த புகாரின் பேரில் ராஜேந்திர பாலாஜி உட்பட 7 பேர் மீது மற்றொரு வழக்கும் பதிவானது. இதையடுத்து ராஜேந்திர பாலாஜி தலை மறைவானார்.
18 நாள் தேடல்களுக்குப் பிறகு 2022 ஜனவரி 5-ல் கர்நாடக மாநிலத்தில் வைத்து தமிழக போலீஸார் அவரைக் கைது செய்தனர். கிட்டத்தட்ட 3 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில் இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. 2023 ஜனவரியில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அதன் பிறகு, விசாரணை நீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தல்படி மீண்டும் இரண்டாவது குற்றப்பத்திரிகை கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அது பதிவு செய்யப்படவில்லை. இதனிடையே, முன்னாள் அமைச்சர் என்பதால் ராஜேந்திர பாலாஜியிடம் விசாரணை நடத்த ஆளுநர் அனுமதிக்கு காத்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக் கோரி ரவீந்திரன் உயர் நீதிமன்றத்தை நாடினார். ஆனால், நீதிமன்றம் உத்தரவிட்டும் போலீஸார் முறையான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவில்லை. அந்த ஆதங்கத்தில் தான் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி இருக்கிறார் நீதிபதி.
இதுகுறித்து ரவீந்திரனை தொடர்பு கொண்டு பேசினோம். “வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் எதுவும் பேசமுடியாது” என்றார். விஜய் நல்லதம்பியோ, “அனுமதி பெறுவது உள்ளிட்ட நிர்வாக காரணங்களால் விசாரணையை தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. என்னைப் பொறுத்தவரை வேலைக்கு பணம் கொடுத்தவர்களிடம் அஃபிடவிட் பெற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளேன்” என்றார்.
இந்த வழக்கை ஆரம்பம் முதலே கண்காணித்து வரும் சிலரோ, “ஆட்சியில் இருந்த போது திமுக-வுக்கு எதிராக வன்முறை பேச்சுகளை உதிர்த்தவர் ராஜேந்திர பாலாஜி. அப்படிப்பட்டவரை சட்டத்தால் தண்டிக்க இந்த வழக்கை திமுக அரசு சரியான ஆயுதமாக பயன்படுத்தி இருக்க முடியும். ஆனால், அதைச் செய்யவில்லை. மாறாக, அவரை தப்பிக்க வைப்பதற்கான அனைத்து வேலைகளையும் செய்திருக்கிறார்கள். சாட்சிகள் கூட அவருக்கு சாதகமான நபர்களைத்தான் போட்டிருக்கிறது போலீஸ்.
ராஜேந்திர பாலாஜிக்கு சிக்கல் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான், வழக்கை சிபிஐ விசாரிக்கும் என நீதிமன்றம் சொன்ன பிறகு பதறிப்போய், நாங்களே விசாரிக்கிறோம் என கோர்ட்டில் முறையிட்டிருக்கிறது போலீஸ்.
எல்லாமே, உன்னை நான் பாத்துக்கிறேன்; என்னை நீ பாத்துக்கோ என்ற கணக்காகத்தான் இருக்கிறது” என்கிறார்கள். இந்த வழக்கு மட்டுமல்ல, “ஆட்சிக்கு வந்தால் சும்மா விடமாட்டோம்” என்று திமுக தலைவர்களால் எச்சரிக்கப்பட்ட பலபேர் சம்பந்தப்பட்ட வழக்குகளும் இப்படித்தான் ‘கவனிக்கப்படாமல்’ இழுபட்டுக் கொண்டிருக்கிறது!