Published : 27 Jul 2018 03:23 PM
Last Updated : 27 Jul 2018 03:23 PM

கருணாநிதி விரைவில் பூரண நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்: ஹெச்.ராஜா .

திமுக தலைவர் கருணாநிதி விரைவில் பூரண நலம் பெற வேண்டும் என பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

ஒன்றரை ஆண்டுகளாக ஓய்வில் இருந்துவரும் திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த 24-ம் தேதி மாலை காய்ச்சல் ஏற்பட்டது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “சிறிது காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அதிர்ச்சி அடையக்கூடிய அளவுக்கு கருணாநிதியின் உடல்நிலை மோசமாக இல்லை. அவரது உடல் நிலை குறித்து வரும் செய்திகள் அனைத்தும் வதந்தியே. அதை யாரும் நம்ப வேண்டாம்” என்றார்.

இதனிடையே “கருணாநிதியின் உடல்நலத்தில் சிறிது நலிவு ஏற்பட்டுள்ளது. சிறுநீரகப் பாதையில் ஏற்பட்டுள்ள நோய்த் தொற்றின் காரணமாக காய்ச்சல் வந்துள்ளது. அதற்குத் தேவையான மருந்துகள் செலுத்தப்படுகின்றன. அவரை 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய மருத்துவக் குழு கவனித்துக்கொள்கிறது. வீட்டிலேயே மருத்துவமனைகள் அடங்கிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன” என காவேரி மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

கருணாநிதியின் வீட்டிற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் வந்து, அவரது உடல் நலம் குறித்து விசாரித்துச் செல்கின்றனர். ஏராளமான திமுக தொண்டர்களும் அங்கு குவிந்துள்ளனர்.

இந்நிலையில், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கோபாலபுரம் இல்லத்திற்கு வந்து மு.க.ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல் நலம் குறித்துக் கேட்டறிந்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, ''கருணாநிதிக்கு காய்ச்சலுக்கான சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் அவர் பூரண நலம் பெற வேண்டும் என நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். திமுக செயல் தலைவர் ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தேன். சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது; உடல்நிலை முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள்'' என ஹெச்.ராஜா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x