அவனியாபுரம், பலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - நாளை தொடங்குகிறது காளைகள், வீரர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு
மதுரை: மதுரை மாவட்டத்தின் புகழ்பெற்ற அவனியாபுரம், பலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்கும் காளைகள், வீரர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு நாளை தொடங்குகிறது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரை அவனியாபுரத்தில் ஜன,14 -ம் தேதியிலும், பாலமேட்டில் ஜன.,15-ம் தேதியிலும், உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜன.,16-ம் தேதியிலும் ஜல்லிக்கட்டு நடக்கிறது. இதற்கான முன் ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் விழாக்குழுவினர் செய்கின்றனர். 3 ஜல்லிக்கட்டுகளிலும் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில், ‘மாடுபிடி வீரர்கள் madurai.nic.in இணையதளம் மூலம் தங்களது பெயர்களை நாளை (ஜன.,6) மாலை 5 மணி முதல் நாளை மறுநாள் ( ஜன.,7) மாலை 5 மணிக்குள் பதிவிடலாம். இது போன்று போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கான முன்பதிவையும் (madurai.nic.in )என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும். அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய மூன்றில் ஏதாவது ஒன்றில் மட்டுமே பங்கேற்க காளைகளுக்கு அனுமதி வழங்கப்படும்.
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளின் உரிமையாளர்களும் (madurai.nic.in )இணையதளம் மூலம் தங்களது பெயர்களை நாளை (ஜன., 6) மாலை 5 மணி முதல் 7ம் தேதி மாலை மாலை 5 மணி முடிய பதிவு செய்யவேண்டும். காளையுடன் உரிமையாளர் ஒருவர், காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளரும் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பதிவு செய்தவர்களின் சான்றிதழ்கள் சரிபார்த்த பிறகே தகுதியான நபர்கள் டோக்கன் பதிவிறக்கம் செய்ய இயலும். டோக்கன் பதிவிறக்கம் செய்த நபர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். இவ்வாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
