

கட்சிக்குள் அதிகார பரவலை அதிகரிக்கவும், அனைத்து மாவட்டங்களிலும் விசிக-வை பலப்படுத்தவும் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளரை நியமிக்க வேண்டும் என்பது திருச்சியில் விசிக நடத்திய ‘வெல்லும் ஜனநாயகம்’ மாநாட்டுக்கு முன்னதாக ஆதவ் அர்ஜுனா திருமாவுக்கு சொன்ன யோசனை.
ஆதவை கட்சியைவிட்டு நீக்கிவிட்டாலும் அவர் போட்டுக் கொடுத்த அந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் இப்போது தீவிரமாகி இருக்கிறார் திருமா. ஆட்சி அதிகாரத்தில் பங்கு, அதிக தொகுதிகளில் போட்டி என விசிக நிர்வாகிகள் திமுக-வுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், கட்சியைப் பலப்படுத்தும் வேலைகளில் தீவிரம் காட்டத் தொடங்கி இருக்கிறார் விசிக தலைவர் திருமாவளவன். அதன் ஒரு பகுதி தான் ஒரு தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளரை நியமிக்கும் திட்டம்.
இதுகுறித்து பேசும் விசிக நிர்வாகிகள், “கட்சியை அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்லும் முயற்சி தான் தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளரை நியமிக்கும் திட்டம். 4 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என இருந்தால் அவர்களால் கட்சியை பெரிய அளவில் வளர்த்தெடுக்க முடியாது.
ஒரு தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்றால் அவர்கள் தங்களது பலத்தை கூட்டவாவது கட்சி வளர்ச்சியில் ஈடுபடுவார்கள்; பொதுப்பிரச்சினைகளில் தலையிட்டு கட்சிக்கு மக்கள் மத்தியில் அங்கீகாரம் சேர்ப்பார்கள். இது ஆதவ் அர்ஜுனா சொன்ன யோசனை என்றாலும் அதை ஒதுக்கித்தள்ளாமல் செயல்படுத்த முடிவெடுத்துள்ளார் திருமா.
முதல்கட்டமாக, மாவட்ட வாரியாக மேலிட பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் ஒவ்வொருவரும் தகுதியான 10 பேர் கொண்ட பட்டியலை மா.செ பதவிக்காக தயாரித்து தலைமைக்கு அனுப்பியுள்ளனர். இதில் பெண்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
மாநில அளவில் 34 துணை நிலை பொறுப்புகளுக்கான நியமனங்கள் தொடர்பாகவும் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. திருமா உள்ளிட்ட நிர்வாகிகள் பரிசீலனைக்குப் பிறகு புதிய நிர்வாகிகள் தொடர்பான அறிவிப்புகள் சீக்கிரமே வெளியாகும் என எதிர்பார்க்கிறோம்” என்கிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய விசிக மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் அ.செல்லப்பாண்டியன், “குறிப்பிட்ட ஒரு சாதிக்கான கட்சி என்றில்லாமல் இப்போது விசிக-வில் அனைத்து சாதியினரும் இணைந்து பணியாற்ற ஆர்வம்காட்டி வருகிறார்கள். அதிகாரத்தை நோக்கி எங்களது இயக்கம் பயணிக்கிறது.
இதைத் தடுக்க பல விதமான இடர்பாடுகளும் தரப்படுகிறது. தலைவரின் வழிகாட்டுதலோடு அதையெல்லாம் தகர்த்தெரிந்து முன்னேறிச் செல்கிறோம். ஏற்கெனவே சமூக நீதி, சமத்துவம், சமானிய மக்களுக்கான இயக்கமாக தமிழக அரசியல் களத்தில் பயணிக்கும் எங்களுக்கு ஆட்சி, அதிகார பகிர்வு கிடைக்கும்போது இன்னும் வலுப்பெறுவோம்” என்றார்.