Published : 30 Jul 2018 09:43 PM
Last Updated : 30 Jul 2018 09:43 PM
மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து வீடு திரும்பிய முதல்வரின் காரை பின் தொடர்ந்த காமெடி இளைஞர்கள் நான்குபேரை போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று சென்னை திரும்பிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி திமுக தலைவர் கருணாநிதியை காண காவேரி மருத்துவமனைக்கு வருகிறார் என்ற தகவல் வெளியானது.
விமான நிலையத்தில் நள்ளிரவு 12 மணிக்கு மேல் வந்து இறங்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கான்வாய் அவரது கிரீன்வேஸ் இல்லத்தை நோக்கி சென்றது. அப்போது அவரது கான்வாயை பின் தொடர்ந்து கார் ஒன்று வேகமாக வந்தது.
முதலில் சாதாரணமாக கவனித்த காவலர்கள் பின்னர் அந்த கார் தொடர்ந்து முதல்வர் வரும் பாதையிலேயே வேகமாக வருவதைப்பார்த்து சந்தேகத்துடன் கண்காணித்தப்படி வந்தனர். நள்ளிரவு என்பதால் வழியில் எந்த போக்குவரத்து நெரிசலும் இல்லாமல் வேகமாக கிரீன்வேஸ் சாலைக்கு வந்த கான்வாய் கிரீன்வேஸ் இல்ல வளாகத்திற்குள் நுழைந்தது.
பின்னால் வந்த காரும் வேகமாக கான்வாய் வாகனங்களுடன் வந்து நின்றது. முதலவர் வாகனத்தை பின் தொடர்ந்து வந்தவர்கள் உள்ளே நுழையும் முயற்சியிலும் ஈடுபட்டதால் போலீஸார் தீவிரவாதிகளை பிடிப்பதுபோல் சுற்றி வளைத்து அந்தக்காரை மடக்கி அதிலிருந்தவர்களை துப்பாக்கி முனையில் கீழே இறக்கினர்.
பின்னர் அவர்களை அபிராமபுரம் போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸார் அவர்களை பிடித்து விசாரித்தபோது அவர்கள் பெயர் ஈக்காட்டுத்தாங்கல் அம்பாள் நகரைச்சேர்ந்த கோவிந்தசிங்(32), ஜெயதீஷ் குமார்(25), ராஜா(30), குன்றத்தூர் நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த சதிஷ்(30) என்பது தெரியவந்தது.
முதல்வரின் காரை ஏன் பின் தொடர்ந்தீர்கள் உங்கள் நோக்கம் என்ன என்று கேட்டபோது அய்யா எங்களுக்கு கருணாநிதி அய்யா சிகிச்சை பெறும் காவேரி மருத்துவமனைக்கு போகவேண்டும் என்ற எண்ணத்தில் புறப்பட்டோம். எங்களுக்கு வழி தெரியாது. முதல்வர் விமான நிலையத்திலிருந்து காவேரி மருத்துவமனைக்கு செல்வதாக டிவி சானல்களில் பார்த்தோம். முதல்வரை பின் தொடர்ந்தால் நேராக காவேரி மருத்துவமனைக்கு சென்று விடலாம் என்று காரை பின் தொடர்ந்தோம் என்று கூறியுள்ளனர்.
முதல்வர் எங்கே போனார் என்று தெரியுமா? அவர் வீட்டுக்கு போனார், அவரை பின் தொடர்ந்து வீட்டுக்குள்ளேயே காரை எடுத்து போயிருக்கிறீர்கள் என்று போலீஸார் திட்டியுள்ளனர். அய்யா எங்களுக்கு தெரியாது அய்யா மீடியாக்களை நம்பி மோசம் போய்ட்டோம் அய்யா, அவர் வீட்டுக்கு போகும் வரை அது காவேரி மருத்துவமனைத்தான்னு நினைத்து பின்னாலேயே அவர் பங்களாவுக்குள் நுழைந்துவிட்டோம் இதுதான் உண்மை என்று கூறியுள்ளனர்.
ஆனால் அவர்கள் சொல்வது எந்த அளவுக்கு உண்மை என்பது போலீஸாருக்கு விளங்காததால் காமெடி இளைஞர்களை நினைத்து தலையில் அடித்துக்கொண்ட போலீஸார், அவர்களை தீர விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT