Published : 02 Jul 2018 10:04 AM
Last Updated : 02 Jul 2018 10:04 AM
காஞ்சிபுரத்தில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதால் பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகள், மொபெட்கள் காவல் நிலையங்களில் குவிந்து வருகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் லாரி, டிராக்டர் மூலம் மணல் கடத்தும்போது பிடிபட்டால் வாகனங்களுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராதத்தை செலுத்தி வாகனங்களை மீட்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதனால் தற்போது நூதன முறையில் மோட்டார் சைக்கிள் மூலம் மணல் கடத்தும் சம்பவங்கள் அதிகம் நடைபெற்று வருகின்றன.
ரூ.6 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனைக்கு கிடைக்கும் பழைய பைக்குகளை வாங்கி சிறுசிறு மூட்டைகளில் மணலை எடுத்து, நேரடியாக கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் விற்றுவிடுகின்றனர். ஒருமுறை மணல் எடுத்து வந்தால் அவர்களுக்கு ரூ.400 கிடைக்கிறது. இவ்வாறு மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் ஒரு நாளைக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை சம்பாதிக்கின்றனர். இவர்கள் வாகனத்துக்காக செலவு செய்யும் தொகை ஓரிரு தினங்களில் கிடைத்து விடுகிறது.
பெரும்பாலும் இவர்கள் இரவு நேரங்களில் மணல் எடுத்து வருகின்றனர். போலீஸில் சிக்கினாலும், தங்கள் வீட்டுத் தேவைக்காக சிறிதளவு எடுத்துச் செல்வதாக கூறி தப்பிவிடுகின்றனர். இவற்றை எல்லாம் மீறி போலீஸாரிடம் சிக்கினாலும், அந்த வாகனத்தை அப்படியே விட்டுவிட்டுச் சென்றுவிடுகின்றனர். இவற்றை அபராதம் செலுத்தி மீட்காமல், வேறு வாகனத்தை வாங்கி மீண்டும் அதுபோன்ற செயல்களில் ஈடுபடு கின்றனர்.
இவ்வாறு மணல் கடத்தலின்போது பிடிபடும் வாகனங்கள் நூற்றுக்கணக்கில் ஆங்காங்கே காவல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கின்றன. பைக்குகள் மூலம் நடைபெறும் மணல் கடத்தலைத் தடுக்க போலீஸார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்து கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT