

பழநி: பழநி முருகன் கோயிலில் மூலவர் சிலை பாதுகாப்பு குழுவினர் இன்று ( புதன்கிழமை) காலை முதல் ஆய்வு செய்து வருகின்றனர்.
அறுபடை வீடுகளில் பழநி முருகன் கோயில் முன்றாவது படை வீடு ஆகும். இக்கோயிலில் உள்ள மூலவர் தண்டாயுதபாணி சுவாமி, நவபாஷானத்தால் ஆனவர். போகர் என்ற சித்தர், இந்தத் தலத்தின் மூலவரை பிரதிஷ்டை செய்துள்ளார்.
மூலவர் சிலையை பாதுகாக்கவும், பலப்படுத்தவும் தேவையான நடவடிக்கை எடுக்கவும், ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி, ஆதினங்கள், ஸ்தபதிகள், ஆகம வல்லுநர்கள் அடங்கிய 15 பேர் கொண்ட வல்லுநர் குழுவை அமைத்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
இக்குழுவினர் அவ்வப்போது, ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிப்பது வழக்கம். அதன்படி, இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பொங்கியப்பன் தலைமையிலான சிலை பாதுகாப்பு வல்லுநர் குழுவினர் மலைக்கோயிலுக்கு வந்தனர். அவர்கள் கருவறைக்குள் சென்று மூலவர் சிலையின் உறுதி தன்மை உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
முன்னதாக, சிறப்பு யாக பூஜை செய்தனர். ஆய்வின் போது, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூர் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், சரவணம்பட்டி குமரகுருபர சுவாமிகள், பழநி ஸ்தல அர்ச்சகர்கள் பிரதிநிதி, கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, தக்கார் கார்த்திக் ஆகியோர் உடனிருந்தனர். ஆய்வு காரணமாக, பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. அதனால் பக்தர்கள் கோயில் பிரகாரம் வரிசையில் காத்திருந்தனர்.