

உதகை: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உதகைக்கு வருவதையொட்டி ஹெலிகாப்டர் இறங்கும் தளத்தை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தது காவல் துறை. வெடிகுண்டு நிபுணர்கள் அதி நவீன வெடிகுண்டு கண்டுபிடிக்கும் உபகரணங்களுடன் தீவிர சோதனை நடத்தினர்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 4 நாட்கள் பயணமாக வரும் 27-ம் தேதி டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை விமான தளத்துக்கு வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டம் உதகை ராஜ்பவன் வருகிறார். 28-ம் தேதி கார் மூலம் குன்னூர் வெலிங்டன் பகுதியில் அமைந்துள்ள முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
29-ம் தேதி உதகை ராஜ் பவனில் ஓய்வெடுக்கும் அவர், 30-ம் தேதி காலை ஹெலிகாப்டர் மூலம் கோவை சூலூர் விமானப்படை தளத்துக்கு சென்று அங்கிருந்து விமானம் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து திருவாரூர் செல்கிறார். திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 9வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். பின்னர் திருச்சி விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.
இதனை முன்னிட்டு உதகை தீட்டுக்கல்லில் உள்ள ஹெலிபேட் தளத்தை காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய 5 காவலர்கள் மூன்று ஷிப்ட் முறையில் கண்காணிக்க உள்ளனர். மேலும் தற்போது ஹெலிபேட் தளத்தை வெடிகுண்டு நிபுணர்கள் அதிநவீன வெடிகுண்டு கண்டுபிடிக்கும் கருவிகளை கொண்டு தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.