Published : 28 Jun 2018 08:27 AM
Last Updated : 28 Jun 2018 08:27 AM

தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேம்படுத்த பேரிடர் உதவிப் படை உருவாக்கப்படும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவிப்பு

பேரிடர் காலங்களில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேம்படுத்த வசதியாக ரூ.1.80 கோடி செலவில் பேரிடர் உதவிப் படை உருவாக்கப்படும் என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித் தார்.

சட்டப்பேரவையில் நேற்று வருவாய்த்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் பேசியதாவது:

அரசு நிர்வாகத்தில் முக்கிய துறையாக விளங்கும் வருவாய்த் துறையில் பல்வேறு பணிகள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. பயனாளிகளிடம் இருந்து ஆன்லைன் மூலமாக மனுக்கள் பெறப்பட்டு மின்னணு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இது வருவாய்த் துறையில் நிகழ்ந்துள்ள மிகப்பெரிய நிர்வாகப் புரட்சியாகும்.

ஆன்லைனில் 72 லட்சத்து 70 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. 72.12 லட்சம் பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளன. 20 லட்சம் ஏழைகளுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் 16 கடலோர மற்றும் மலைப்பகுதி மாவட்டங்களில் அவசரகால கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சிம்கார்டுகள் விநியோகம்

வட்டாட்சியர், மண்டல துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் நிலம் தொடர்பான பணிகள், சான்றிதழ் வழங்குதல் பணிகளை மேற்கொள்ளவும், இயற்கை இடர்பாடு நேரங்களில் பொதுமக்களுக்கு மேம்பட்ட சேவை வழங்கவும் வசதியாக 1,863 பேருக்கு ரூ.50 லட்சம் செலவில் இணையவசதியுடன் கூடிய சிம்கார்டுகள் புதிய கட்டண திட்டத்தில் வழங்கப்படும்.

இந்திய வானிலை ஆராய்ச்சி மைய உதவியுடன் இடி, மின்னல் குறித்த முன்னெச்சரிக்கை வழங்கும் வகையில் ரூ.80 லட்சம் செலவில் முன்னோடி திட்டம் இந்த ஆண்டு செயல்படுத்தப்படும்.

வெடிமருந்து பொருட்கள் சேமிக்க உரிமம், பெட்ரோலிய சட்டம் தொடர்பான தடையில்லா சான்றிதழ் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படும். அதேபோல ஆதரவற்ற விதவைகள், குழந்தைகள் சான்றிதழ் மற்றும் துயர் துடைப்பு திட்டங்களுக்கான நிவாரண உதவி பெற இ-சேவை மூலம் விண்ணப்பம் பெறும் முறை இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும்.

மாற்றுத் திறனாளிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வருவாய் கோட்ட அளவில் மாதம் ஒருமுறையும், மாவட்ட அளவில் இரு மாதங்களுக்கு ஒருமுறையும், மாநில அளவில் 3 மாதங்களுக்கு ஒரு முறையும் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்படும்.

வெள்ள முன்னோட்ட திட்டம்

பேரிடர் காலங்களில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேம்படுத்த வசதியாக ரூ.1.80 கோடி செலவில் பேரிடர் உதவி படை உருவாக்கப்படும். சென்னை மாவட்டத்துக்கென வெள்ள முன்னறிவிப்பு திட்டம் உருவாக்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x