Published : 29 Jun 2018 12:13 PM
Last Updated : 29 Jun 2018 12:13 PM
மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்டார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல்வர் எடப்பாடி பழனிசாமி விதி எண் 110-ன் கீழ் செய்தி, மக்கள் தொடர்புத் துறைக்கு பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் முழு விவரம்:
1. அண்ணாவின் நினைவிடத்தில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தை புதுப்பித்தல், பதிக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களைப் புதுப்பித்தல், புல்வெளி சீரமைத்தல், மின் பணிகள் மற்றும் இதர புனரமைப்புப் பணிகள் 4 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.
2. சுதந்திரப் போராட்ட வீரர் ராமசாமி படையாச்சியாரின் பிறந்த தினமான செப்டம்பர் 16 ஆம் நாள் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும்.
3. மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த தினமான அக்டோபர் 1 ஆம் நாள் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும்.
4. பத்திரிகையாளர் பெற்று வரும் ஓய்வூதியத்தை 8 ஆயிரம் ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாயாகவும், குடும்ப ஓய்வூதியத்தை 4,750 ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாயாகவும் கடந்த ஆண்டு தமிழக அரசு உயர்த்தி வழங்கியது. மேற்படி ஓய்வூதியம் பெறுவதற்கான பணிக்கொடையின் உச்சவரம்பு மற்றும் பணிக்கால ஆண்டு வருமான உச்சவரம்பு, 2 லட்சம் ரூபாயிலிருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.
5. பணிக்காலத்தில் பத்திரிகையாளர்கள் கடுமையான நோயினால் பாதிக்கப்பட நேர்ந்தால், அவர்கள் சிகிச்சை மேற்கொள்ள ஏதுவாக பத்திரிகையாளர் நல நிதியம் மூலம் தற்போது வழங்கப்பட்டு வரும் 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி, ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.
இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT