தீபாவளி விடுமுறை முடிந்து திரும்பிய பொதுமக்கள்: கிளாம்பாக்கம், தாம்பரம் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

தாம்பரம்: தீபாவளி பண்டிகைக்காக 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்ட நிலையில், நேற்றுடன் விடுமுறை முடிவடைந்ததால் பலரும் தங்களது சொந்த ஊரிலிருந்து மீண்டும் சென்னை திரும்பினார். அதனால் பரனூர் சுங்கச்சாவடி மற்றும் கிளாம்பாக்கம், தாம்பரம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தீபாவளி பண்டிகைக்கு அக்.31 மற்றும் நவ.1-ம் தேதி அரசு பொது விடுமுறை அறிவித்த நிலையில் சனி மற்றும் ஞாயிறு வார விடுமுறை என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. அதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்குசென்றனர். பண்டிகையை கொண்டாடிய பிறகு மீண்டும் சென்னை நோக்கி நேற்று முதல் அரசு மற்றும்தனியார் பேருந்துகள், கார்கள் மூலம்சென்னைக்கு திரும்ப தொடங்கினர்.

இதனால் நேற்று மாலை முதல் கிளாம்பாக்கம், பெருங்களத்தூர், தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய ஜிஎஸ்டி சாலை முழுவதும் போக்குவரத்து போலீஸார் பணியில் ஈடுபட்டு வந்தனர். இருப்பினும் அதிகப்படியான வாகனங்கள் வருகையால் போலீஸார் சிரமமடைந்தனர். இதேபோல் பாலாறு மேம்பாலத்திலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பரனூர் சுங்கச்சாவடியிலும் நெரிசல் ஏற்பட்டது. இதேபோல் காட்டாங்கொளத்தூர், தாம்பரம் ரயில் நிலையங்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in