Published : 14 Jun 2018 02:41 PM
Last Updated : 14 Jun 2018 02:41 PM
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால் நீதிமன்றத்தின் புண்ணியத்தில் மக்கள் விரும்பாத துரோக ஆட்சி இன்னும் 2-3 மாதங்கள் நீடிக்கும் என டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று (வியாழக்கிழமை) சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “மக்கள் விரோத அரசு தமிழகத்தை ஆள்வதற்கு நீதிமன்றம் இன்னும் கூடுதல் அவகாசம் கொடுத்துள்ளது. எங்கள் தரப்பு எம்எல்ஏக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்.
இன்று என் இல்லத்தில் நடத்தப்பட்ட ஆலோசனைக்கு வராத எம்எல்ஏக்கள் தங்கள் சொந்த அலுவல் காரணமாக வரவில்லை. 18 பேரும் கட்சியை காப்பாற்ற பதவிகளை தியாகம் செய்திருக்கின்றனர். முதல்வர், துணை முதல்வர் பக்கம் சென்றால் தங்களுக்குக் கிடைக்கும் சலுகைகளை தூக்கி எறிந்திருக்கின்றனர். என்னை உறுப்பினராக்கி சட்டப்பேரவைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என அறிவித்து இருந்தால் அடுத்தக்கட்ட போராட்டத்திற்கு தயாராகியிருப்போம். நாங்கள் போராளிகள்.
தலைமை நீதிபதி புதுச்சேரியில் இதேபோன்றதொரு வழக்கில் சபாநாயகர் முடிவில் தலையிட்டு தீர்ப்பு வழங்குகிறார். ஆனால், தமிழகத்தில் சபாநாயகர் உத்தரவை மறு ஆய்வு செய்யக்கூடாது என்கிறார்.
இந்தத் தீர்ப்பால் நீதிமன்றத்தின் புண்ணியத்தில் மக்கள் விரும்பாத துரோக ஆட்சி இன்னும் 2-3 மாதங்கள் நீடிக்கும். இதனால், மக்கள் வருத்தப்படுவர். இந்த தீர்ப்பால் மக்கள் தோல்வியடைந்திருக்கின்றனர்.
ஏழை எளிய மக்கள், விவசாயிகள், நெசவாளிகள், அரசு ஊழியர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் இந்த அரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என டிடிவி தினகரன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT