Published : 27 Jun 2018 03:26 PM
Last Updated : 27 Jun 2018 03:26 PM

நான் மெரிட்டில் எம்பிபிஎஸ் படித்தேன்; தமிழிசை எம்ஜிஆர் பரிந்துரையில் எம்பிபிஎஸ் படித்தவர்: அன்புமணி விமர்சனம்

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுடன் தான் விவாதம் நடத்த தயார் என, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வருவதற்கான திட்டத்தை முதலில் யார் கொண்டு வந்தது என்பது குறித்து, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸுக்கும் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் மோதல் உருவாகியுள்ளது. இதையடுத்து, தமிழிசை அறிவற்றவர் என அன்புமணி விமர்சித்தார்.

அதற்கு பதிலடி தரும் விதமாக, “அன்புமணி ராமதாஸ், என்னை தலைவராக இருக்க தகுதி இருக்கின்றதா எனக் கேட்கிறார். தான் மட்டும் அதிபுத்திசாலி, வேறு எந்தக் கட்சியிலும் புத்திசாலிகள் இல்லை என அவர் நினைக்கிறார். 20 ஆண்டுகால கடின உழைப்பு, அறிவாற்றல், தேசிய பண்பு இருப்பதால் தான் தேசியக் கட்சியின் தலைவராக வந்திருக்கிறேன். தகுதியில்லாமல் வரவில்லை. அரசியல்வாதியின் மகளாக இருந்தபோதும் அந்த நிழலில் தலைவராக வரவில்லை. சுய உழைப்பில் தலைவராக வந்திருக்கிறேன். யார் அறிவாளி என என்னுடன் விவாதம் நடத்த அன்புமணி தயாரா?” என தமிழிசை தெரிவித்தார்.

இந்நிலையில், சேலத்தில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், “நான் மெரிட்டில் எம்பிபிஎஸ் படித்தேன். தமிழிசை பரிந்துரையின் பேரில் எம்பிபிஎஸ் படித்தவர். தமிழிசையின் தந்தை மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரிடம் பரிந்துரை பெற்றதன் அடிப்படையிலேயே தமிழிசை எம்பிபிஎஸ் படித்தார். அதனால் அவர்தான் அறிவாளி. . தமிழிசை சவுந்தரராஜன் தான் அறிவாளி என்பதை நானே ஒத்துக்கொள்கிறேன். யார் அறிவாளி என விவாதம் நடத்த நான் தயார்” என அன்புமணி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x