Published : 07 Jun 2018 09:49 AM
Last Updated : 07 Jun 2018 09:49 AM

வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகே புதிய மேம்பாலம் கட்டும் பணியில் மெத்தனம்: பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி

வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகே புதிய மேம்பாலம் கட்டும் பணிகள் மெத்தனமாக நடைபெற்று வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சென்னை - அரக்கோணம் மார்க்கத்தில் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக வில்லிவாக்கம் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள ரயில்வே கேட்டை தினமும் லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி வந்தனர். வில்லிவாக்கம், கொளத்தூர், பாடி போன்ற முக்கிய பகுதிகளை இணைக்கும் இந்த ரயில்வே கேட்டை பலரும் பயன்படுத்தியதால் இங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனவே இந்த ரயில்வே கேட்டை அகற்றிவிட்டு, மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும், அரசியல் கட்சி நிர்வாகிகளும் வலியுறுத்தி வந்தனர்.

புதிய மேம்பாலம் அமைக்க மத்திய அரசு நிதியில் ஒரு பகுதியும், மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் மற்றொரு பகுதி நிதியும் ஒதுக்கி, பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இதன்படி இங்கு மேம்பாலம் அமைக்க மத்திய அரசு ரூ.7.35 கோடி நிதி ஒதுக்கியது. இதைத்தொடர்ந்து , ரயில்வே கேட் மூடப்பட்டு, மேம்பாலம் அமைப்பதற் கான பணிகள் கடந்த ஆண்டு ஜூலை 15-ம் தேதி தொடங்கியது. முதல் கட்டமாக மேம்பாலம் அமையும் இடத்தில் 3 பெரிய பில்லர்களை அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டன. ஆனால் அதன் பிறகு கடந்த 3 மாதங்களாக எந்த பணியும் நடக்கவில்லை என அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் சிலர் கூறும்போது, “அண்ணாநகர், ஐசிஎப், வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொளத்தூர், பூம்புகார் நகர், செங்குன்றம் பகுதிகளுக்கு செல்ல இந்த ரயில்வே கேட் முக்கிய வழியாக இருந்தது. புதிய மேம்பாலம் கட்டுவதற்கு முன்பே இங்கு மாற்றுப்பாதை வசதி செய்து தர வேண்டும் என்று கூறியிருந்தோம். ஆனால் அதற் கான எந்தவித நடவடிக்கையை யும் எடுக்காமல் திடீரென ரயில்வே கேட்டை மூடி புதிய மேம்பாலம் அமைக்கும் பணிகளைத் தொடங்கினார்கள்.

பாலம் அமைக்கும் பணிகள் 8 மாதங்களில் முடியும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வரையில் 3 பில்லர்கள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. கடந்த 3 மாதங்களாக எந்த பணியும் நடக்காமல் உள்ளது. இதனால் இப்பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கள் மற்றும் வேலைக்கு செல் வோர் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், வில்லிவாக்கம் காய்கறி மார்க்கெட் வழியாக செல்லும் வகையில் தற்காலிக மாற்றுப்பாதையாவது உடனடியாக அமைத்து தரவேண்டும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x