Published : 06 Jun 2018 09:09 AM
Last Updated : 06 Jun 2018 09:09 AM

இரு கைதிகளிடையே மோதல்; கோவை சிறையில் கைதி கொலை

கோவை மத்திய சிறையில் 2 கைதிகளிடையே நேற்று ஏற்பட்ட மோதலில், கல்லால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

கோவை பீளமேடு ஹட்கோ காலனியில் வசித்து வந்தவர் ரமேஷ்(45), கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர். பீளமேடு பகுதியில் நடந்த அடிதடி வழக்கில் மே 8-ம் தேதி கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதேபோல், பேரூரைச் சேர்ந்த விஜய்(19), அப்பகுதியில் மே 25-ம் தேதி நடைபெற்ற அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இருவரும் ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், நேற்று மதியம் இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியதாகக் கூறப்படுகிறது. அப்போது, விஜய் கல்லால் தாக்கியதில், ரமேஷ் படுகாயமடைந்துள்ளார்.

தகவலறிந்து வந்த சிறைத் துறை அதிகாரிகள், ரமேஷை மீட்டு, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து சிறை வளாகத்துக்குள் கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x