Published : 19 Jun 2018 09:46 PM
Last Updated : 19 Jun 2018 09:46 PM

அரசுக்கு எதிரான விமர்சனம் என்றால் நடவடிக்கை, நீதித்துறையை விமர்சித்தால் வேடிக்கை பார்ப்பீர்களா?- விளக்கம் அளிக்க போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு

முதல்வர், அமைச்சருக்கு எதிராக விமர்சனங்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் காவல்துறை, நீதித்துறைக்கு எதிரான கருத்துக்கள் மீது தானாக முன்வந்து ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை? என காவல்துறை விளக்கமளிக்க நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

மயிலாப்பூரை சேர்ந்த ஹேமந்த்குமார் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் விஜய பீஷ்மர் என்பவர் மருத்துவமனை நடத்தி வருகிறார். அவரது மருத்துவமனைக்குள் நுழைந்த சிலர் தாங்கள் வழக்கறிஞர்கள் என்று கூறி அவரை தாக்கியதாகவும், மருத்துவமனையில் உள்ள பொருட்களை எடுத்துச் சென்றதாகவும் காவல்துறையில் புகார் அளித்தார்.

புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன், பொங்கியப்பன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது, விஜய் பீஷ்மர் வாடகை பாக்கி வைத்திருந்தால் தான் தகராறு ஏற்பட்டதாகவும், தற்போது வாடகை பாக்கியை தர ஒப்புக்கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

வாடகை தகராறுகள் குறித்து எத்தனை வழக்குகள் கீழமை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது என ஜூன் 25-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு முடிந்த பிறகு, அரசு வழக்கறிஞர்களிடம் காவல்துறையினர் பற்றி தனது அதிருப்தியை நீதிபதி கிருபாகரன் வெளிப்படுத்தினார்.

பொதுமக்களிடமிருந்து புகார்கள் வரும்பொழுது காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்வதில்லை என்றும், அவசியமான சமயங்களில் தானாக முன்வந்து கூட வழக்குகளை பதிவு செய்வதில்லை என குற்றம் சாட்டினார்.

சமீபத்தில் 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பளித்த தலைமை நீதிபதிக்கு எதிராக விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதாகவும், அதன் மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார். வழக்கமாக நீதிமன்ற தீர்ப்பை விமர்சிப்பது உரிமைதான் என்றாலும், அந்த தீர்ப்பை எழுதிய நீதிபதியை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.

முதல்வர், அமைச்சர் அல்லது அரசுக்கு எதிராக இதுபோன்ற விமர்சனங்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் காவல்துறை, நீதித்துறைக்கு எதிரான கருத்துக்கள் மீது தானாக முன்வந்து ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என கேள்வி எழுப்பினார்.

இதுதொடர்பாக அரசின் விளக்கத்தை வரும் ஜூன் 25-ம் தேதி தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x