Published : 17 Jun 2018 11:44 AM
Last Updated : 17 Jun 2018 11:44 AM
தான் கொண்ட கொள்கையில் இறுதிவரை உறுதியாக இருந்தவர் மூத்த பத்திரிகையாளர் சின்னகுத்தூசி என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் புகழாரம் சூட்டினார்.
சின்னகுத்தூசி நினைவு அறக்கட்டளை சார்பில் 7-ம் ஆண்டு விருது வழங்கும் விழா, சென்னை மயிலாப்பூர் சிஐடி காலனியில் உள்ள கவிக்கோ அரங்கில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.
விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதான ரூ.1 லட்சம் பரிசுத் தொகை, திராவிடர் கழக செயற்பாட்டாளர் க. பார்வதிக்கு வழங்கப்பட்டது.
இதுதவிர, சிறந்த அரசியல் கட்டுரைக்கான பரிசு ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் நடுப்பக்க ஆசிரியர் சமஸ், சமூகம், பண்பாடு சார்ந்த கட்டுரைக்கான பரிசு எழுத்தாளர் இரா.மோகனசுந்தரம், பொருளாதார கட்டுரைக்கான பரிசு பேராசிரியர் தி.ராசகோபாலன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. ஒவ்வொரு கட்டுரைக்கும் பரிசுத் தொகையாக தலா ரூ.10 ஆயிரம் அளிக்கப்பட்டது.
இந்த விருதுகளை வழங்கி இரா.முத்தரசன் பேசும்போது, “தான் கொண்ட கொள்கையில் இறுதிவரை உறுதியாக, உணர்வுப்பூர்வமாக வாழ்ந்தவர் சின்னகுத்தூசி. அரசியல், பொருளாதாரம் தொடர்பாக கடினமான விஷயங்களை எளிதாக மக்களிடம் கொண்டு சேர்த்தவர். அவ ரது விமர்சனங்களில் கேலி, கிண்டல் நிறைந்திருக்கும். ஆனால், அந்த விமர்சனத்தை கண்டு நமக்கு கோபம் வராது” என்றார்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசும்போது, “சின்னகுத்தூசி மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் நிறைந்திருக்கிறார். பெரியார் ஆசிரியர் பயிற்சிச் பள்ளியில் பயின்றவர் அவர். இறுதிவரை பெரியாரிஸ்டாகவே வாழ்ந்தார். கொள்கை என்று வரும்போது சமரசம் செய்து கொள்ளாமல் இருந் தவர்” என்றார்.
நக்கீரன் குழும இதழ்களின் ஆசிரியர் நக்கீரன் கோபால் பேசும்போது, “அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவர் சின்னகுத்தூசி. பிரச்சினை என்று யாராவது அணுகினால் தன்னால் முடிந்த உதவிகளை செய்தவர்” என்றார்.
இந்த விழாவில் மூத்த பத்திரிகையாளர் இரா.ஜவகர், சாந்தா பதிப்பகத்தைச் சேர்ந்த ஆர்.ராஜ்மோகன், சீதை பதிப்பகத்தைச் சேர்ந்த கவுரா ராஜசேகர், ஓட்டல் பேரடைஸ் நிர்வாகி ராயப்பன், நக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின், உயிர்மை ஆசிரியர் மனுஷ்யபுத்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT