Published : 14 Jun 2018 08:23 AM
Last Updated : 14 Jun 2018 08:23 AM

7-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் ‘தேசியம் காத்த செம்மல்’ என்ற தலைப்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வரலாறு: பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

வரும் ஆண்டில் 7-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் ‘தேசியம் காத்த செம்மல்’ என்ற தலைப்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் முழுமையான வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் மேலூர் தொகுதி எம்எல்ஏ பெரியபுள்ளான் (எ) செல்வம், தமிழ் வளர்ச்சி, இந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கைகள் மீது பேசும்போது, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் முழுமையான வரலாறு பாடத்திட்டத்தில் இடம்பெறாதது குறித்து கூறினார்.

அப்போது, சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இல்லை. அவருக்கு பதில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எழுந்து, “பெரியபுள்ளானின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் 7-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் முழுமையாக அவரது வாழ்க்கை வரலாறு இடம் பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்’’ என்றார்.

அதன்பின், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சட்டப்பேரவையில் கூறியதாவது:

மேலூர் எம்எல்ஏ பெரியபுள்ளான், தேசிய தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாற்றுப் பாடம் 6-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் இடம் பெறவில்லை என்று கேட்டார். அமைச்சர்கள் பலரும் இது தொடர்பாக என்னிடம் தெரிவித்தனர்.

துணை முதல்வர், முதல்வருடன் இருக்கும்போது இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. 7-ம் வகுப்பு பாடத்திட்டத்தில், ‘தேசியம் காத்த செம்மல்’ என்ற தலைப்பில், முத்துராமலிங்கத் தேவர் ராஜாஜியுடன் தொடர்பு கொண்டிருந்தது, அவரது ராணுவத்துக்கு உதவி செய்தது உள்ளிட்ட அனைத்து வரலாறுகளும் அடங்கிய பாடம் வரும் கல்வியாண்டு முதல் சேர்க்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x