Published : 14 Jun 2018 12:03 PM
Last Updated : 14 Jun 2018 12:03 PM

எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும்: தங்க தமிழ்ச்செல்வன் நம்பிக்கை

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என நம்புவதாக, தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களுள் ஒருவரான தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களான தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) மதியம் தீர்ப்பு வழங்க உள்ளது. இந்த தீர்ப்பு தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட தங்க தமிழ்ச்செல்வன், திருப்போரூர் கோதண்டபானி, தஞ்சாவூர் ரெங்கசாமி, சோலிங்கர் பார்த்திபன், ஆம்பூர் பாலசுப்ரமணி, மானாமதுரை மாரியப்பன் கென்னடி, பெரம்பூர் வெற்றிவேல் உள்ளிட்ட எம்எல்ஏக்கள், சென்னை அடையாற்றில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இல்லத்திற்கு வருகை தந்தனர். அங்கு டிடிவி தினகரன் எம்எல்ஏக்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

முன்னதாக, செய்தியாளர்களைச் சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன் “நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு மதிப்பு உள்ளது. எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என நம்புகிறோம். எங்களுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் நான் மட்டும் மேல்முறையீடு செய்யமாட்டேன். மற்ற எம்எல்ஏக்கள் மேல்முறையீடு செய்வார்களா என்பது குறித்து எனக்கு தெரியவில்லை.

தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் தொகுதிக்கு சென்று மக்களை சந்தித்து நல்லவற்றை செய்ய முடியவில்லை. கட்சி தாவல் அடிப்படையில் எங்களை தகுதிநீக்கம் செய்யவில்லை.

அதிமுக, இரட்டை இலை எங்களுக்குத் தான். 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டால் அமமுக சார்பில் நின்று 18 எம்எல்ஏக்களும் மீண்டும் வெற்றி பெறுவோம். நாங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் உறுதியாகவும் கட்டுக்கோப்பாகவும் இருக்கிறோம்.

எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் இன்றைக்கே சட்டப்பேரவைக்கு சென்று ஜனநாயக கடமையை ஆற்றுவோம்” என தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x