Published : 05 Jun 2018 08:03 AM
Last Updated : 05 Jun 2018 08:03 AM

மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அனைத்து உரிமங்களும் ரத்து; ஸ்டெர்லைட் ஆலையை இனி திறக்கவே முடியாது- சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு பிறப்பித்துள்ள அரசாணை சட்டப்படி செல்லும். இனி யார் நினைத்தாலும் அந்த ஆலையை திறக்க முடியாது என்று சட்டப்பேரவையில் முதல் வர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் இது தொடர்பாக நடந்த விவாதம்:

எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின்: நீட் தேர்வு, ஜல்லிக்கட்டுக்காக தீர்மானம் நிறைவேற்றியதுபோல ஸ்டெர்லைட் ஆலையை மூட பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அமைச்சரவையிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். துப்பாக் கிச் சூட்டில் பலியானோருக்கு இழப்பீட்டுத் தொகையை ரூ.1 கோடியாக அதிகரிக்க வேண்டும். படுகாயம் அடைந்தோருக்கு தலா ரூ.50 லட்சம், காயமடைந்தோருக்கு தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். அவர்களை வீடு வீடாகச் சென்று கைது செய்வதை நிறுத்த வேண்டும்.

சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி: துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர், காயமடைந்தோருக்கான இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்க வேண்டும். போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்.

முதல்வர் பழனிசாமி: ஸ்டெர் லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுவிட்டது. இதற்காக தமிழக அரசு வெளியிட்ட அரசாணை சட்டப்படி செல்லும். குடிநீர் இணைப்பு, மின்சாரம், பாய்லர் உரிமம் என ஸ்டெர் லைட் ஆலைக்கு அளிக்கப்பட்ட அனைத்து உரிமங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. யார் நினைத்தாலும் ஆலையை இனி திறக்க முடியாது.

பொதுமக்கள் தங்கள் உரிமைக்காக போராட எந்தத் தடை யும் இல்லை. எதிர்க்கட்சியான நீங்களும் போராடுகிறீர்கள். எதிர்க்கட்சியாக இருந்தபோது நாங்களும் போராடினோம். அப்போதெல்லாம் உருட்டைக்கட்டைகள், பெட்ரோல் குண்டுகளை எடுத்துச் சென்றோமா, பெட் ரோல் குண்டு வீசுபவர்களும் உருட்டுக்கட்டையால் தாக்குபவர்களும் பொதுமக்களா, இவர்கள்தான் சமூகவிரோதிகள், விஷமிகள். அவர்கள்தான் கைது செய்யப்படுகின்றனர்.

வன்முறையாளர்கள், சமூக விரோதிகள், விஷமிகளை எந்த அரசும் ஊக்கப்படுத்தக் கூடாது. அப்படி செய்தால் எதிர்காலத்தில் பெரும் பிரச்சினையாகிவிடும். ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் விசாரணை அறிக்கை கிடைத்ததும் அதன் அடிப்படையில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கப் படும்.

மு.க.ஸ்டாலின்: காவல்துறையினர் சீருடை இல்லாமல் குறிபார்த்து சுட்டதற்கான ஆதாரங்களும் வெளியாகி உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூட சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றத் தயங்குவது ஏன். திமுக, அதிமுக ஆட்சியில் ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெற்றதை கவனத் தில் கொள்ள வேண்டும். பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினால் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் நீதிமன்றத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: நீட் தேர்வு, ஜல்லக்கட்டு ஆகியவற்றுக்கு மத்திய அரசிடம் அனுமதி பெற வேண் டிய நிலை இருந்தது. எனவே தான் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினோம். ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் அனைத்து அதிகாரங்களும் மாநில அரசிடமே உள்ளது. எனவே, பேரவை யில் தீர்மானம் கொண்டுவர வேண்டிய தேவை இல்லை. ஸ்டெர்லைட் இனி ஒருபோதும் இயங்க முடியாது. அதற்காகத் தான் உச்ச நீதிமன்றத்தில் கேவி யட் மனு தாக்கல் செய்துள் ளோம்.

அமைச்சர் சி.வி.சண்முகம்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுவிக்க பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினோம். ஆனால். அதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. எனவே, பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினாலும் நீதிமன்றம் செல்ல முடியும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x