Published : 11 Jun 2018 08:12 AM
Last Updated : 11 Jun 2018 08:12 AM
அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்து பொதுச்செயலாளருக்குப் பதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டதற்கு தலைமை தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராகவும், முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் 5-ம் தேதி காலமானார். இதைத்தொடர்ந்து டிசம்பர் 29-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவில் கட்சியின் தற்காலிகப் பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.31-ம்தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவர் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றார்.
2017 பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சசிகலா முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். ஆனால், பிப்ரவரி 7-ம் தேதி சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் போர்க்கொடி உயர்த்தினார். இந்நிலையில் பிப்ரவரி 14-ம் தேதி சொத்துக் குவிப்பு வழக்கில் இறுதி தீர்ப் பளித்த உச்ச நீதிமன்றம், சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதிப்படுத்தியது. எனவே, சசிகலா முதல்வராக பதவியேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சசிகலா ஆதரவுடன் பிப்ரவரி 16-ம் தேதி பழனிசாமி முதல்வராக பதவி ஏற்றார்.
முதல்வர் பழனிசாமிக்கும், அதிமுக துணைப் பொதுச்செயலாளராக இருந்த டிடிவி தினகரனுக்கும் இடையே மோதல் வெடித்தது. வருமானவரித் துறை சோதனைகள், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து ஆகியவற்றால் மோதல் மேலும் அதிகரித்தது. ஓபிஎஸ் - பழனிசாமி அணிகள் இணைய பேச்சுவார்த்தைகள் நடந்தன. 2017 ஆகஸ்ட் 21-ம் தேதி அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தன. துணை முதல்வராக ஓபிஎஸ்ஸூம், அமைச்சராக கே.பாண்டியராஜனும் பதவியேற்றனர். இதைத்தொடர்ந்து செப்டம்பர் 12-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதும், அவரால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் நியமனமும் ரத்து செய்யப்பட்டன.
அதிமுக கட்சி விதிகளின்படி பொதுச் செயலாளருக்கே அனைத்து அதிகாரங்களும் உள்ளன. ஆனால், கட்சி விதிகளில் திருத்தம் செய்து பொதுச்செயலாளருக்குப் பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. பொதுச்செயலாளருக்கு இருந்த அனைத்து அதிகாரங்களும் இந்த இரு பொறுப்புகளுக்கும் வழங்கப்பட்டன. ஒருங்கிணைப்பாளராக துணை முதல்வர் ஓபிஎஸ்ஸூம், இணை ஒருங்கிணைப்பாளராக முதல்வர் பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இது தவிர இணை ஒருங்கிணைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.
தேர்தல் ஆணையம், அரசு, வங்கிக் கணக்குகள் தொடர்பான ஆவணங்களில் கையெழுத்திடும் அதிகாரம், கட்சி நிர்வாகிகள் நீக்கம், சேர்த்தல், வேட்பாளர் தேர்வு ஆகிய அனைத்துக்குமான அதிகாரம் ஓபிஎஸ் - பழனிசாமி இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. அதன்பிறகு அதிமுக கட்சியின் பெயர், கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவை ஓபிஎஸ் - பழனிசாமி அணிக்கு வழங்கப்பட்டன. இந்நிலையில், அதிமுக கட்சியின் அடிப்படை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டதை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதால் அதிமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT