Published : 20 Jun 2018 07:14 AM
Last Updated : 20 Jun 2018 07:14 AM
லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தால் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான சரக்குகள் தேங்கியுள்ளதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.சுகுமார் தெரிவித்துள்ளார்.
டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்வதை நிறுத்த வேண்டும். பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கினர். இந்த போராட்டத்தில் பல சங்கங்கள் பங்கேற்காததால் 60 சதவீத லாரிகள் இயக்கப்பட்டன. இருப்பினும் நாடுமுழுவதும் 40 சதவீத லாரிகள் ஓடாததால் காய்கறிகள், அரிசி, சிமெண்ட், பருப்பு, உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 2-வது நாளாக நேற்றும் வேலை நிறுத்தம் தொடர்ந்தது. முதல்நாளில் வேலைநிறுத்தத்தில் கலந்துக் கொள்ளாதவர்களில் சிலர் இரண்டாவது நாளில் பங்கேற்றனர். இதனால் நாடுமுழுவதும் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகளின் வரத்து கணிசமாக குறைந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.சுகுமார் கூறியதாவது:
எங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். நாடுமுழுவதும் சுமார் 40 சதவீத லாரிகள் ஓடவில்லை. தமிழகத்தில் 3 லட்சம் லாரிகள் இயக்கப்படவில்லை. லாரிகள் ஓடாததால் அரிசி, பருப்பு, காய்கறிகள், சிமெண்ட் உள்ளிட்ட பல பொருட்களை கொண்டு செல்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
2 நாட்களில் தமிழகத்தில் சுமார் ரூ.100 கோடி மற்றும் நாடுமுழுவதும் சுமார் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்புள்ள சரக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தைக்கு அழைப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கிறோம். எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தால் மட்டுமே வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவோம். குறிப்பாக டீசல் மீதான வாட் வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும். அதுவரை எங்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு ஆர்.சுகுமார் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT