Published : 31 May 2018 09:31 PM
Last Updated : 31 May 2018 09:31 PM

தவறான தொடர்பை கண்டித்த கணவர்: ஆண் நண்பருடன் சேர்ந்து தீர்த்துக்கட்டி நாடகமாடிய மனைவி

வெளிநாட்டிலிருந்து தாயகம் திரும்பிய கணவரை தனது தவறு தெரிந்ததால் ஆண் நண்பருடன் சேர்ந்து கொலை செய்துவிட்டு இயற்கை மரணம் என்று நாடகமாடிய மனைவியும், ஆண் நண்பரையும் போலீஸார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம் மயிலாடுதுறை பொன்செய் கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன்(42). இவரும் அதே கிராமத்தை சேர்ந்த ரேகா(35) என்பவரும் 14 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள.

இதனிடையே குடும்ப சூழ்நிலை காரணமாக அறிவழகன் பணம் சம்பாதிக்க வெளியூருக்கு வேலை தேடி சென்றார். இதனால் அவர் மாதக்கணக்கில் வெளியூரில் தங்கி வேலை செய்யும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் ரேகாவின் வீட்டுக்கு பெயிண்ட் அடிக்க வந்த பக்கத்து கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவருடன் ரேகாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது, நாளடைவில் இருவரும் நெருங்கி பழகினர். இது கணவர் அறிவழகனுக்கு தெரியாது. அவர் வெளியூரிலிருந்து எப்போதாவது ஊருக்கு வந்துவிட்டு செல்வார்.

இந்நிலையில் கடந்த வாரம் ஊரிலிருந்து வீட்டுக்கு வந்த அறிவழகன் மனைவியின் தொடர்பை கண்டுபிடித்தார். இதனால் ஆத்திரத்தில் மனைவியை திட்டி அடித்துள்ளார். கணவனுக்கு தனது விஷயம் தெரிந்து விட்டதால் தீர்த்துக்கட்ட முடிவு செய்தார் ரேகா. தனது ஆண் நண்பருடன் கலந்து பேசினார். அதன்படி இரண்டு நாட்களுக்கு முன் இரவு கணவர் அறிவழகன் தூங்கும் போது ஆண் நண்பர் ராஜ்சேகரை வரவைத்துள்ளார்.

பின்னர் அறிவழகன் கழுத்தை ராஜ்சேகர் நெரிக்க தலையணையை முகத்தில் அழுத்தி கொலை செய்துள்ளனர். பின்னர் ஒன்றும் நடக்காதது போல் ராஜ்சேகர் போய்விட காலையில் ரேகா சத்தம் போட்டு அழுதுள்ளார். நன்றாக படுத்து தூங்கியவர் ஹார்ட் அட்டாக்கில் செத்துப்போய் விட்டாரே என்று அழுதுள்ளார்.

இதை ஊர் மக்களும் நம்பியுள்ளனர். ஆனால் உறவினர்கள் பார்த்தபோது அறிவழகன் கழுத்தில் காயம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் செம்பனார் கோவில் காவல் நிலையத்தில் புகார் அளிக்க போலீஸார் அறிவழகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மரணத்தில் சந்தேகம் இருந்ததால் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ரேகாவின் நடவடிக்கை சந்தேகம் தரவே அவரை தனியே துருவி துருவி விசாரித்தபோது தனது தவறான நடத்தை குறித்தும், அதை அறிந்த கணவரை, தானும் தனது ஆண் நண்பர் ராஜசேகரும் சேர்ந்து கொலை செய்ய முடிவெடுத்து கொன்று விட்டு நாடகமாடியதை ஒப்புக்கொண்டார்.

அவரை கைது செய்த போலீஸார், அவர் அளித்த தகவலின் பேரில் ஆண் நண்பர் ராஜசேகரை கைது செய்தனர். இதில் ரேகா உண்மை சொல்லும் வரை உறவினர்கள் அவர் கொலை செய்திருப்பார் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x