Published : 15 Jun 2018 08:23 AM
Last Updated : 15 Jun 2018 08:23 AM
தமிழகத்தில் நேற்று மாலை பிறை தென்படவில்லை. இதனால் இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட இருந்த ரம்ஜான் பண்டிகை நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.
ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு மேற்கொள்வார்கள். நோன்பு நிறைவடைந்த பிறகு ரம்ஜான் கொண்டாடப்படும்.
மே மாதம் நோன்பு தொடக்கம்
இந்த ஆண்டுக்கான ரம்ஜான் நோன்பு கடந்த மே மாதம் தொடங்கியது. இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை முன்னிட்டு அரசு அலுவலகங்கள்,கல்வி நிலையங்களுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்திருந்தது.
இந்நிலையில் நேற்று பிறை தெரியாத காரணத்தால் வெள்ளிக்கிழமைக்குப் பதிலாக சனிக்கிழமை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிறை தென்படவில்லை
இதுகுறித்து தமிழக தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் நேற்றிரவு வெளியிட்ட அறிவிப்பில், “தமிழகத்தில் ஜூன் 14-ம் தேதி பிறை தென்படவில்லை. இதன் காரணமாக தமிழகத்தில் ஜூன் 16-ம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்” என்று கூறியுள்ளார்.
தமிழக தலைமை காஜியின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழக அரசு அலுவலகங்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்பட்டு இருந்த விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT