Published : 11 Jun 2018 08:19 AM
Last Updated : 11 Jun 2018 08:19 AM

புதிய தலைமுறை தொலைக்காட்சி மீது வழக்கு; அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்

கோவையில் ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி சார்பில் நடந்த விவாத நிகழ்ச்சியில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட திடீர் மோதல் தொடர்பாக, சேனல் நிர்வாகம் மற்றும் அந்த தொலைக்காட்சியின் செய்தியாளர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: புதிய தலைமுறை மீது வழக்குப் பதிவு செய்த அக்கிரமத்தை எதிர்த்து ஒட்டுமொத்த மாக அனைவரும் போராட வேண்டும். புதிய தலைமுறை மீது போடப்பட்ட வழக்குகளை தமிழக அரசும், காவல்துறையும் திரும்பப் பெறவேண்டும். பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகங்களின் சுதந்திரத்தைப் பறிக்க வேண் டாம் என்று அரசை எச்சரிக்கிறேன்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயலாளர் இரா.முத்தரசன்: ஜனநாயக விரோத நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தும் அணுகுமுறையை மாநில அரசு கைவிட வேண்டும். புதிய தலைமுறை மற்றும் இயக்குநர் அமீர் மீதான வழக்குகளை அரசு திரும்பப் பெற வேண்டும்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்: புதிய தலைமுறை மீது பொய் வழக்கு பதிவு செய்திருப்பது வேதனைக்குரியது. பொய் வழக்குகளைத் திரும்பப் பெறுவதுடன், வன்முறைக்கு வழிகோலும் வகையில் நடந்துகொண்ட பாஜகவினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: புதிய தலைமுறை மீது போடப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற வேண்டும். பத்திரிகை சுதந்திரத்தை பறிக்கவோ, அடக்க நினைக்கவோ அரசு முயற்சிக்கக் கூடாது.

திராவிடர் கழகத் தலைவர்கி.வீரமணி: புதிய தலைமுறை மீதும், அமீர் மீதும் தமிழக அரசு வழக்குகளைப் போட்டிருப்பது ஊடக சுதந்திரத்தையும், ஜனநாயக உரிமையையும் பறிக்கிற எதேச்சதிகாரப் போக்காகும்.

மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: புதிய தலைமுறை மீதும் அந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற இயக்குநர் அமீர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கி றேன்.

தமிழ் தேசிய பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன்: புதிய தலைமுறை மீது வழக்கு தொடர்ந்திருப்பது கருத்துரிமையை முடக்கி அச்சுறுத்தும் செயலாகும்.

இந்திய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் பி.ஜெயசீலன்: புதிய தலைமுறை, அதன் செய்தியாளர் மீது வழக்கு பதிவு செய்திருப்பது கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதலாகும்.

இவ்வாறு அறிக்கையில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொலைக்காட்சி மீதான வழக்கை திரும்பப் பெறக்கோரி பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்கள், அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x