Published : 20 Jun 2018 01:00 PM
Last Updated : 20 Jun 2018 01:00 PM
தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான தனிநபர் விசாரணை கமிஷன் அரசாணையை எதிர்த்து மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி வழங்கியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அர்ஜூனன் தரப்பில் அவரது வழக்கறிஞர் இன்று (புதன்கிழமை) உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதிகள் செல்வம்,பஷீர் அகமது அமர்வு முன்பு முறையிட்டார்.
அதில், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது மே 22 முதல் 24 ஆம் தேதி வரை துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷன் அமைக்கபட்டது. இந்த ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்து வெளியிட்ட அரசாணையில் அரசு விதிமுறைகள் முறையாக பின்பற்றவில்லை.
அதாவது சட்டம் ஒழுங்கு மற்றும் துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி தனித்தனியாக விசாரணை செய்ய உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் சட்ட ஒழுங்கு பிரச்சினையால் தான் துப்பாக்கி சூடு நடந்தது என அரசாணையில் உள்ளது. மேலும் துப்பாக்கி சூடு சம்பவம் மே 22, 23, 24 ஆகிய மூன்று தினங்கள் நடைபெற்றன. ஆனால் ஒருநபர் விசாரணை கமிஷன் அரசாணையில் மே 22 ஆம் தேதி நடந்த துப்பாக்கி சூட்டினை மட்டும் விசாரிக்க நியமனம் செய்யபட்டுள்ளது.
மே 23 மற்றும் 24 ஆம் தேதி நடந்த துப்பாக்கி சூடு தொடர்பாக எந்த தகவலும் இல்லை. மேலும் விசாரணை கமிஷனில் இச்சம்பவம் தொடர்பான பொது அறிவு பெற்ற அதிகாரிகள் ஆணையத்தில் இருக்கலாம் என்ற விதிமுறை உள்ளது. ஆனால் அரசாணையில் இசம்பவம் தொடர்புடைய அதிகாரிகள் மட்டுமே இருக்க வேண்டும் என உள்ளது. எனவே ஒருநபர் விசாரணை கமிஷன் அமைப்பதில் விதிமுறைகள் முறையாக பின்பற்றாமல் அரசாணை வெளியிடபட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடபாக நியமிக்கப்பட்ட ஒருநபர் விசாரணை கமிஷன் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” என அர்ஜூனன் தரப்பு வழக்கறிஞர் முறையிட்டார்.
அதற்கு மனுவாக தாக்கல் செய்யும் பட்சத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு ஏற்றுகொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT