Published : 06 Jun 2018 11:29 AM
Last Updated : 06 Jun 2018 11:29 AM

காவல் உயர் பயிற்சி மையம் சார்பில் வண்டலூர் அருகே ‘போலீஸ் பப்ளிக் ஸ்கூல்’ தொடக்கம்

வண்டலூர் அடுத்த ஊனமாஞ்சேரியில் காவல் உயர் பயிற்சி மையம் சார்பில் 5-ம் வகுப்பு வரையிலான ‘போலீஸ் பப்ளிக் ஸ்கூல்’ தொடங்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

வண்டலூர் அடுத்த ஊனமாஞ்சேரியில் தமிழக காவல் துறையின் காவல் உயர் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் சமீபத்தில் புதிதாக ஆங்கில வழியில் மாநில கல்வி பாடத்திட்டத்தில் ‘போலீஸ் பப்ளிக் ஸ்கூல்’ என்ற பெயரில் 1-ம் வகுப்பு முதல் 5-ம்வகுப்பு வரையிலான பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. இதில் காவல் துறை, வனத் துறை, சிறைத் துறை, மற்றும் தீயணைப்பு துறையினருக்கு 50 சதவீதமும் பொதுமக்களுக்கு 50 சதவீதமும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போது தற்காலிகமாக காவல் உயர் பயிற்சி மையத்தில் செயல்பட்டு வரும் இந்தப் பள்ளிக்கு, மேலக்கோட்டையூரில் உள்ள போலீஸார் குடியிருப்பு அருகில் புதிய கட்டிடம் கட்டப்படவுள்ளது. அதுவரை காவல் உயர் பயிற்சி மையத்தில் வகுப்புகள் நடைபெறும். இந்த பள்ளி, கேந்திரிய வித்யாலயா மற்றும் சைனீஸ் கல்வி தரத்தில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பள்ளியைக் குறித்து மேலும் தகவல்களைத் தெரிந்துகொள்ள, வண்டலூர் டிஎஸ்பி: 94981 70707: ஓட்டேரி ஆய்வாளர் 94981 05217: போக்குவரத்து ஆய்வாளர் 94981 46512: ஓட்டேரி உதவி ஆய்வாளர் 94981 03358 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

இப்பள்ளியைக் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கடந்த 2013-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் ‘போலீஸ் பப்ளிக் ஸ்கூல்’ தொடங்கப்படும் என அறிவித்தார். அதன்படி இந்த ஆண்டு பள்ளியை தொடங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தொடங்கப்படவுள்ள இந்த பள்ளிக்கான கட்டிடத்தைக் கட்ட மேலக்கோட்டையூரில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் விடுதியுடன் கட்டிடம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

12-ம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும்

இந்நிலையில் தற்காலிகமாக காவல் உயர் பயிற்சி மையத்தில் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. இந்த புதிய கல்வி நிலையத்துக்கு நோடல் அதிகாரியாக கல்வித்துறை இணை செயலாளர் பதவி வகிப்பார். இவருக்கு கீழ் போலீஸ் உயரதிகாரிகள் 6 பேர் இயங்குவர்கள். மாநில அரசு பாடத் திட்டத்தின்படியே இங்கு பாடங்கள் நடத்தப்படும்.

மேலும் சிபிஎஸ்சி பாடப்பிரிவைத் தொடங்கவும் அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம். புதிய கட்டிடங்களைக் கட்டும் பணி முடிந்தவுடன் 12-ம் வகுப்பு வரை இப்பள்ளி விரிவுபடுத்தப்படும். ராணுவ பள்ளியைப் போல் இந்த பள்ளியும் அனைத்து நவீன வசதிகளுடன் செயல்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x