Published : 28 Jun 2018 08:33 AM
Last Updated : 28 Jun 2018 08:33 AM
குற்றாலத்தில் நேற்று மிதமான சாரல் மழை பெய்ததால் அருவிகளில் நீர் வரத்து அதிகரித்தது.
குற்றாலத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக சாரல் காலம் களைகட்டியுள்ளது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. நேற்று மிதமான சாரல் மழை பெய்தது.
இதனால் குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் நீர்வரத்து சற்று அதிகரித்தது. நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்ட விழாவை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று உள்ளூர் விடுமுறை என்பதால், சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். நேற்று காலை 8.30 மணி வரை குண்டாறு அணைப் பகுதியில் 5 மி.மீ., ராமநதி அணை, அடவிநயினார் கோவில் அணை, செங்கோட்டையில் தலா 2 மி.மீ., பாபநாசம், சேர்வலாறில் தலா 1 மி.மீ. மழை பதிவானது.
பாபநாசம் அணையின் நீர்மட்டம் சிறிது உயர்ந்து 91.65 அடியாக இருந்தது. சேர்வலாறு அணை நீர்மட்டம் சிறிது குறைந்து 108.04 அடியாக இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT