Published : 03 Jun 2018 06:24 PM
Last Updated : 03 Jun 2018 06:24 PM

ரஜினிகாந்த் பாஜகவுக்கு வந்தால் கண்டிப்பாக எதிர்ப்பேன்: சுப்பிரமணியன் சுவாமி காட்டம்

ரஜினிகாந்த பாஜகவுக்கு வந்தால் கண்டிப்பாக எதிர்ப்பேன் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

சென்னை வந்திருந்த பாஜக மூத்த தலைவரும், எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, ஆளுநர் அலுவலகத்தின் செலவுகளை ஆறில் ஒரு பங்காகக் குறைத்துள்ளது குறித்து ஆளுநர் பன்வாரிலாலுக்கு சுப்பிரமணியன் சுவாமி வாழ்த்து தெரிவித்தார்.

அதன்பின் சுப்பிரமணியன் சுவாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

''தமிழகத்தில் தீவிரவாத நடவடிக்கைகள் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் ஆலோசனை நடத்தினேன். முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாளை முன்னிட்டு முந்தைய திமுக அரசு குற்றவாளிகளை விடுதலை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தது.

தலைவர்கள் பிறந்தநாளின் போது குற்றவாளிகளை விடுதலை செய்யும் அரசின் முறை குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன்.

இந்த ஆளுநர் ஒவ்வொரு வழக்கையும் தீவிரமான ஆய்வுக்கு உட்படுத்திய பின்பே எந்த முடிவையும் எடுக்கக்கூடியவர். எந்த விஷயத்திலும் மிகுந்த நேர்மையுடன், நியாயத்துடன் நடக்கூடியவர் ஆளுநர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில், மக்கள் அமைதியாகப் போராடிய நிலையில், அதில் நக்சலைட்டுகள், எல்டிடிஇ அமைப்பினர், தீவிரவாதிகள், சில தனியார் தொண்டு நிறுவனங்கள் பின்புலத்தில் இருந்து கொண்டு வன்முறையைத் தூண்டிவிட முயற்சித்துள்ளன. கூடங்குளம் போராட்டத்திலும், ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் இதேபோன்ற சூழல்தான் ஏற்பட்டது. தூத்துக்குடி போராட்டம் குறித்து விசாரணை அறிக்கைவெளியான பின்புதான் என்ன நடந்தது என்பது தெரியவரும்.

தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மிகச் சிறப்பாக, முந்தைய திமுக ஆட்சியைக் காட்டிலும் ஆட்சி நடத்துகிறது.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்காமல் அவருடன் கூட்டணி பற்றி தெரிவிக்க முடியாது. அதேசமயம், பாஜகவுக்கு ரஜினி வந்தால் கண்டிப்பாக எதிர்ப்பேன். என்னைப் பொறுத்தவரை நடிகர்கள் அரசியலைவிட்டு ஒதுங்கி இருக்க வேண்டும். நதிநீர் இணைப்புக்கு ஒரு கோடி ரூபாய் தருவேன் என்று வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் ரஜினிகாந்த் வாக்குறுதியளித்தார். அதைக் கொடுத்தாரா?''

இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x