Published : 14 Jun 2018 11:14 AM
Last Updated : 14 Jun 2018 11:14 AM
18 எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பு அணுகுண்டாக வெடிக்கப் போகிறதா அல்லது புஷ்வாணமாக போக போகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களான தங்க.தமிழ்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) மதியம் தீர்ப்பு வழங்க உள்ளது. இந்த தீர்ப்பு தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை தமிழகமே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. 18 எம்எல்ஏக்களின் நிலை என்னாவாகும் என்பதை உயர் நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். வழக்கின் முடிவு எப்படி வருகின்றது என்று பார்ப்போம்.
தீர்ப்பு அணுகுண்டாக வெடிக்கவும் செய்யலாம் அல்லது புஷ்வாணமாக போகவும் செய்யலாம். தமிழக அரசியலில் இந்த வழக்கின் தீர்ப்பு அணுகுண்டாக வெடிக்கப் போகிறதா அல்லது புஷ்வாணமாக போக போகிறதா என்பதை தீர்ப்பு வெளியான பின்பு தான் பார்க்க முடியும். 18 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் சபாநாயகர் ஒரு முடிவெடுத்திருக்கிறார். உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்ன முடிவெடுக்கின்றனர் என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்” என தமிழிசை தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT