Published : 07 May 2018 08:41 AM
Last Updated : 07 May 2018 08:41 AM

ரூ.5 கோடி மதிப்பு ஐம்பொன் சாமி சிலைகள் மீட்பு: பேரணாம்பட்டு அருகே 2 பேர் கைது

ரூ.5 கோடி மதிப்புள்ள 3 ஐம்பொன் சாமி சிலைகளை, பேரணாம்பட்டு அருகே சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் மீட்டனர்.

இது குறித்து காவல் துறையினர் கூறியதாவது: வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த அரவட்டலா மலைப் பகுதியில் பழமைவாய்ந்த சாமி சிலைகள் விற்பனை செய்யப்படுவதாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேலுக்கு தகவல் வந்தது. அவரது உத்தரவின் பேரில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் சாமி சிலைகளை விற்பனை செய்யும் நபர்களிடம் பழமைவாய்ந்த கோயில் சிலைகள் வேண்டும் என்று தொலைபேசியில் கேட்டனர். இதையடுத்து நடந்த பேரத்தில் ரூ.5 கோடி மதிப்புள்ள முருகன், வள்ளி, தெய்வானை ஐம்பொன் சிலைகள் விற்பனைக்குத் தயாராக இருப்பதாக சிலைக் கடத்தல் கும்பல் தெரிவித்தது.

இதையடுத்து போலீஸார் சாதாரண உடையில் சிலைக் கடத்தல் நபர்கள் கூறிய பங்களாமேடு பகுதிக்கு சென்றனர். அப்போது காரில் வந்த 2 பேர், போலீஸாரை அடையாளம் கண்டு தப்பி ஓட முயன்றனர்.

போலீஸார் விரட்டிச் சென்று அவர்கள் 2 பேரையும் பிடித்தனர். விசாரணையில் அவர்கள், அரவட்டா மலைப் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (38), ஈஸ்வரன் (48) என்பது தெரியவந்தது.

காரில் ஐம்பொன்னாலான முருகன், வள்ளி, தெய்வானை சிலைகள் இருந்தன. இது குறித்து தகவல் வந்ததும், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் அங்கு வந்து விசாரணை நடத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x