

சென்னை: தமிழகம் முழுவதும் 21 வாரமாக நடைபெற்ற 844 நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்களில் 13 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாமை முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் மொத்தம் 1,256 இடங்களில் முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, வாரம்தோறும் சனிக்கிழமை மட்டும் நடந்து வந்த முகாம், தற்போது வியாழக்கிழமையும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்று வருகிறது.
இந்த முகாம்களில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, இதயம், நுரையீரல், எலும்பியல், நரம்பியல், தோல், காது, மூக்கு, தொண்டை, மகப்பேறு, இயன்முறை மருத்துவம், பல், கண், மனநலம், குழந்தைகள் நலம் ஆகிய மருத்துவ சேவைகள் மற்றும் இந்திய மருத்துவம் சார்ந்த ஆலோசனைகள் சிறப்பு மருத்துவ நிபுணர்களைக் கொண்டு வழங்கப்படுகின்றன.
பரிசோதனைகள் மட்டுமின்றி, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பதிவு செய்தல் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு அங்கீகார சான்றிதழ் வழங்குதல் போன்ற சேவைகளும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 21-வது வாரமாக நேற்று முன்தினம் 44 இடங்களில் நடந்த முகாம்களில் 65,147 பேர் பயனடைந்தனர். இதுவரை 21 வாரமாக நடைபெற்றுள்ள 844 முகாம்களில் 13 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர்.